காதலித்ததற்காக 17 வயது சிறுவன் முகத்தில் கரியைப் பூசி மொட்டை அடித்த பஞ்சாயத்து
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஒரு பெண்ணை காதலித்ததற்காக 17 வயது சிறுவனின் முகத்தில் கரியை பூசி அவருக்கு மொட்டை அடித்த கொடுமை நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காசிபூர் மாவட்டத்தில் உள்ள கூத்தன் காஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் அவர் 16 வயதான ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்துள்ளார்.

கடந்த 15ம் தேதி ப்ரியா தனது உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். அதற்கு ராஜேஷோ அவர்களை பார்க்க செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். அதையும் மீறி ப்ரியா கிளம்பியதால் ராஜேஷ் அவரது கன்னத்தில் அறைந்தார். அதன் பிறகு அவர்களின் காதல் விவகாரம் ஊருக்கு தெரிய வந்துள்ளது.
உடனே ஆளும் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. ராஜ்மதி நிஷாத்தின் மகன் அம்ரேந்திர நிஷாத்திற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பஞ்சாயத்தை கூட்டினார். பஞ்சாயத்தில் ராஜேஷ் முகத்தில் கரியை பூசி அவரை அடித்து நொறுக்கினர். பின்னர் அம்ரேந்திர நிஷாத் முன்னிலையில் ராஜேஷுக்கு மொட்டையடிக்கப்பட்டது.
இந்நிலையில் ப்ரியாவின் முகத்தில் கரி பூசப்பட்டது. அவர்கள் இருவரையும் ஊர் முழுக்க ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் பஞ்சாயத்தார் முன்னிலையில் கட்டாய கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு ராஜேஷ், ப்ரியாவை 6 மாதத்திற்கு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக பஞ்சாயத்தார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications