பள்ளிகளை குறி வைத்து எரிக்கும் தீவிரவாதிகள்.. 90களின் பயங்கர காலம் திரும்புகிறதா காஷ்மீரில்?
1990களில் காஷ்மீரில் பள்ளிக்கூடங்களை குறி வைத்து தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டனர். இப்போதும் அதே போன்ற தாக்குதல்களை தீவிரவாதிகள் முன்னெடுத்து வருகிறார்கள்.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பழையபடி 1990களை போல தீவிரவாதிகள் கை ஓங்கிவிட்டதோ என எண்ணத் தோன்றும் அளவுக்கு அங்கு, பள்ளிகளை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குவது அதிகரித்துள்ளது.
வங்கிகளும், பள்ளிகளும் இப்போது தீவிரவாதிகளின் எளிதான தாக்குதல் இலக்குகளாக மாறியுள்ளன. இதேபோன்ற நிலைமை 1990களில் அதிகமாக இருந்தது. தீவிரவாதம் காஷ்மீரில் உச்சத்தில் இருந்தபோது பள்ளிகளே அவர்களின் இலக்காக இருந்தது.
கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை காஷ்மீரில் 23 பள்ளிகள் எரிக்கப்பட்டுள்ளதை வைத்து பார்க்கும்போது, 90களின் காலம் திரும்பிவிட்டதாக அஞ்சுகிறார்கள் காஷ்மீர் மக்கள்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் 10 மாவட்டங்களில் ஏதாவது ஒரு பள்ளியாவது நொறுக்கப்பட்டோ அல்லது தீவைக்கப்பட்டோ உள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 5 பள்ளிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் சமீபத்தில் வெடித்த கலவரத்தின்போது, 17 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் மர்மமான முறையில் எரிக்கப்பட்டுள்ளன.
அனந்த்நாக் பகுதியில், ஒரு உயர்நிலை பள்ளி&ஹனிபா பள்ளி எரிக்கப்பட்டது. இது வக்ஃபு வாரியத்தால் நடத்தப்படும் பள்ளியாகும். முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் அவரது தந்தை, முப்தி முகமது சையது ஆகியோர் இந்த பள்ளியில் படித்த பிரபலங்களாகும். தெற்கு காஷ்மீரிலுள்ள குல்காம் பகுதி இந்த தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஐந்து பள்ளிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. புட்கம் மாவட்டத்தில் மூன்று பள்ளிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதுவரை போலீசார் ஒருவரை கூட கைது செய்ய முடியாமல் கை பிசைகிறார்கள்.
1990களில் சுமார் 5 ஆயிரம் பள்ளிகள் தீவிரவாதிகளால் முற்றிலுமாக நாசம் செய்யப்பட்டன. பள்ளிகளுக்கு குழந்தைகளால் செல்லவே முடியவில்லை. சில நேரங்களில், ஆசிரியர்களையும், மாணவ, மாணவிகளையும் வெளியேற்றிவிட்டு பட்டப்பகலிலேயே தீ வைத்த சம்பவங்களும் நடந்தன.
இப்பள்ளிகளை புனரமைப்பு செய்ய அரசு பல வருடங்கள் கஷ்டப்பட்டது. ஆனால், இப்போதுள்ள நிலைமையை பார்க்கும்போது, பட்ட கஷ்டங்கள் எல்லாம் பலனில்லாமல் போய்விடும் போல உள்ளது.
1989 மே 10ம் தேதி ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் வெடிகுண்டு வெடித்து, பிஸ்கோ மெமோரியல் பள்ளி கடுமையான சேதமடைந்தது.
1990, மார்ச் 17ம் தேதி ஸ்ரீநகரின் சோனாவார் பகுதியில் கத்தோலிக் மிஷனுக்கு சொந்தமான பள்ளியை தீக்கிரையாக்க முயற்சி நடந்தது. 1990 மே 23ல் ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில், பிஸ்கோ மெமோரியல் பள்ளிக்குள் வெடிகுண்டு வீசப்பட்டது. அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சிலர் வந்து, பள்ளி நிர்வாகிகளை மிரட்டி அரபி மொழியில் பாடம் கற்றுக்கொடுக்க கூறினர். இஸ்லாம் கல்வியை போதிக்க கூறினர்
1990 நவம்பர் 11ல், லால் சவுக் பகுதியில் மீண்டும் பிஸ்கோ மெமோரியல் பள்ளி மீது குண்டு வீசப்பட்டது. 1991, பிப்ரவரி 23ல் லால்சவுக்கிலுள்ள மிஸ் மெலன்சன் பெண்கள் பள்ளி மீது குண்டு வீசப்பட்டது.
1992, ஜூலை 5ல், அதே லால் சவுக்கிலுள்ள பிஸ்கோ மெமோரியல் பள்ளியில் மீண்டும் குண்டு வெடித்தது. 1993, ஜூலை 24ம் தேதி பிஸ்கோ மெமோரியல் பள்ளி ஹாஸ்டலை தீவிரவாதிகள் தீ வைத்து எரித்தனர்.