ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதல்: ரிசர்வ் படை வீரர்கள் 2 பேர் பலி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரிசர்வ் படை வீரர்கள் 2 பேர் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், அவந்திபோரா பகுதியில் இன்று மாலை மத்திய ரிசர்வ் படை போலீசார் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். பாண்டவ் பார்க் அருகில் சென்றபோது அவர்களை வழிமறித்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டனர்.
இந்த சம்பவத்தையடுத்து அவந்திபோரா பகுதி முழுவதும் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இருப்பினும் தீவிரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இந்த மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன் ஆகஸ்ட் மாதம் காவல் நிலையத்தை தீவிரவாதிகள் தாக்கியதில் பொதுமக்கள் 2 பேர் காயமடைந்தனர். செப்டம்பர் மாதம் நடத்திய தாக்குதலில் 9 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.