"மண்ணுக்குள் கிடைத்த வைரம்"... வாயை பிளக்க வைக்கும் மதிப்பு.. 2 ஏழைகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! செம
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இறைச்சி கடை மற்றும் பழக்கடை நடத்தி வரும் இருநண்பர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வைரம் தேடும் பணியில் ஈடுபட்டனர். விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் மண்ணை தோண்டி அவர்களுக்கு 15.34 காரட் எடையுள்ள ஒரு உயர்தர வைரம் கிடைத்துள்ளது. இதனால் ஏழை நண்பர்களாக இருக்கும் இருவரின் வாழ்க்கையும் ஒரே நாளில் மாறிப்போயுள்ளது. இருவருக்கும் ‛ஜாக்பாட்' அடித்தது எப்படி? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் காதிக் (வயது 24). இவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் பெயர் சஜித் முகமது. இவருக்கு வயது 23. இவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

பன்னா மாவட்டம் மத்திய பிரதேசத்தில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இங்கு பெரிய அளவில் வளர்ச்சி என்பது இல்லை. மக்கள் வறுமை, தண்ணீர் பற்றாக்குறை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இந்த பகுதியில் நிறைய வைர சுரங்கங்கள் உள்ளன. பெரும்பாலான வைர சுரங்கங்கள் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் உள்ளூர் மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் மாநில அரசு சார்பில் 3 மாதங்களுக்கு ஒருமுறை சிறிய அளவிலான நிலம் வைர சுரங்கத்தில் குத்தகைக்கு வழங்கப்படும்.
இப்படி குத்தகை எடுக்கும் மக்கள் அந்த இடங்களில் வைரம் தேடி கொள்ளலாம். இது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கலாம் என்ற அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை பின்பற்றி வருகிறது. இதனால் உள்ளூர் மக்கள் ஏராளமானவர்கள் வைரம் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் அனைவருக்கும் வைரம் கிடைப்பது இல்லை. ஒரு சிலருக்கு மட்டுமே அதிர்ஷ்டம் அடிக்கும். அந்த வகையில் தான் தற்போது சதீஷ் காதிக் மற்றும் சஜித் முகமது ஆகியோருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இவர்கள் நவம்பர் 19ம் தேதி வைர சுரங்கத்தில் குறிப்பிட்ட இடத்தை குத்தகைக்கு எடுத்தனர். தங்களின் பணிக்கு பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
சம்பவத்தன்று காலை நேரத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து வைரம் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளை நிறத்தில் ஒரு கல் மின்னியது. அதை பார்த்ததும் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அது வைரமாக தான் இருக்கும் என்று சதீஷ் காதிக் மற்றும் சஜித் முகமது ஆகியோர் நம்பினர்.
உடனடியாக அந்த வெள்ளை நிற கல்லை எடுத்து கொண்டு வைர மதிப்பீட்டாளர் அனுபாம் சிங்கிடம் வழங்கி பரிசோதிக்கும்படி கூறினர்.
அனுபாம் சிங் பரிசோதனை செய்தார். 15.34 காரட் எடையுள்ள ஒரு உயர்தர வைரம் என்பதை அவர் உறுதி செய்தார். அதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் இருக்கும் என்று அவர் கூறினார். இதனால் சஜித் முகமது, சதீஷ் காதிக் ஆகியோர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றனர். இருவரும் கண்டுபிடித்த ஏலம் விரைவில் ஏலமிடப்படுகிறது.இந்த ஏலத்தில் இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்தில் கிடைக்கும் பணம் இருவரிடமும் வழங்கப்பட உள்ளது.
இதுபற்றி சதீஷ் காதிக் மற்றும் சஜித் முகமது ஆகியோர் கூறுகையில், ‛‛இப்போது நாங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு ஹேப்பியாக இருக்கிறோம். நாங்கள் நிலம் வாங்குவது அல்லது எங்களின் வணிகத்தை விரிவுப்படுத்துவது பற்றி யோசிக்கவில்லை. எங்களின் சகோதரிகளுக்கு நல்லபடியாக திருமணம் வைக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
தற்போது வைரம் கண்டெடுத்த இருவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக பன்னா மாவட்டத்தில் வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது அவர்களுக்கு அதிர்ஷ்ம் அடித்துள்ளது. இதுபற்றி சஜித் முகமதுவின் தந்தை நபீஸ் கூறுகையில், ‛‛என் தந்தை இங்கு நீண்டகாலமாக வைரம் தேடினார். ஆனால் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. இப்போது என் மகனுக்கு வைரம் கிடைத்துள்ளது. ஹேப்பியாக இருக்கிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications