மேற்கு வங்கத்தில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு: சிறுவன் உள்பட 2 பேர் பலி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மற்றும் நாடியா மாவட்டங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரகுநாதகஞ்ச் பகுதியில் புதிதாக கட்டுமானப்பணி நடக்கும் இடத்தில் குழந்தைகள் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் ஒரு பையில் வைத்திருந்த குண்டுகள் மீது கல்பட்டு அவை வெடித்துச் சிதறின.

இதில் சிறுவன் ஒருவர் பலியானார். மேலும் பல குழந்தைகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடியா மாவட்டத்தில் உள்ள நாதுங்கிராம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார், இரண்டு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications