குழந்தை வரம் தந்த அனுமன்.. எதிர்ப்பை மீறி பிரமாண்ட கோவில்! அப்பா கனவை நனவாக்கும் முஸ்லிம் பிரதர்ஸ்
அமராவதி: ஆந்திராவில் குழந்தை வரம் தந்த அனுமனுக்கு பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி அப்பாவின் கனவை நிறைவேற்றும் வகையில் இஸ்லாமிய சகோதரர்கள் 2 பேர் பிரமாண்டமாக கோவில் கட்டி வரும் நிலையில் அதன் பின்னணியில் உள்ள சுவாரசிய காரணம் அனைவரையும் வியக்க வைக்கிறது.
நம் நாட்டில் பிறந்த மக்கள் ஒவ்வொருவரின் பின்னணியிலும் ஒரு ஜாதி, மதம் அடையாளமாக உள்ளது. சிலர் ஜாதி, மதத்தின் அடிப்படையில் பிரச்சனைகள் கிளப்பினாலும் கூட பெரும்பாலான மக்கள் அப்படி செய்வது இல்லை. இன்னும் சொல்லப்போனால் பிறப்பால் அனைவரும் சமம் என்பதை உணர்ந்து ஜாதி, மதங்களை கடந்தும் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது உண்டு.

இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமியர்கள் விழாக்களில் இந்துக்களும், இந்துக்களின் திருவிழாவில் இஸ்லாமியர்களும் அன்னதானம் வழங்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தான் தற்போது 2 இஸ்லாமிய சகோதரர்கள் இந்து கடவுளான ஆஞ்சநேயருக்கு எதிர்ப்புகளை தாண்டி அப்பாவின் கனவை நனவாக்கும் நோக்கத்தில் பிரமாண்டமாக கோவில் கட்டி வருகின்றனர். மேலும் இஸ்லாமியர சகோதரர்கள் அனுமன் கோவில் கட்டுவதன் பின்னணியில் சுவாரசிய காரணம் ஒன்று உள்ளது. அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கே கொத்தாபேட்டா கிராமத்தை சேர்ந்தவர் அஜித் பாஷா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவரின் பெயர் பைரோஸ். இன்னொருவரின் பெயர் சந்த் பாஷா. தற்போது அஜித் பாஷா இறந்துவிட்டார். இத்தகைய சூழலில் தான் திருப்பதி நெடுஞ்சாலையில் சகோதரர்களான பைரோஸ் மற்றும் சந்த் பாஷா ஆகியோர் பிரமாண்டமாக அனுமன் கோவில் கட்டி வருகின்றனர்.
பிறப்பால் இஸ்லாமியர்களாக இருக்கும் அவர்கள் எதற்காக இந்து தெய்வமான அனுமனுக்கு கோவில் கட்டுகின்றனர்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இதுபற்றி விசாரித்தபோது பைரோஸ் மற்றும் சந்த் பாஷா ஆகியோர் ஆச்சரியான தகவலை தெரிவித்தனர். அதாவது அவரது தாத்தாவுக்கு குழந்தை பாக்கியம் என்பது இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் அவர் ஒரு சாமியாரை சந்தித்துள்ளார். அப்போது அந்த சாமியார் அனுமனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று தெரிவித்தாராம். இதையடுத்து பைரோஸ் - சந்த் பாஷா ஆகியோரின் தாத்தா அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். இதையடுத்து தான் பைரோஸ் - சந்த் பாஷா ஆகியோரின் தந்தை அஜித் பாஷா பிறந்துள்ளார். இதுபற்றி அறிந்த தந்தை அஜித் பாஷா அனுமனுக்கு கோவில் கட்ட முடிவு செய்தார்.
இதற்கான பணியை அவர் 2010ம் ஆண்டு தொடங்கினார். ஆனால் சொந்த மதத்தில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோவில் கட்டும் பணி என்பது முடங்கி உள்ளது. தற்போது தந்தை அஜித் பாஷா காலமான நிலையில் அவரது கனவை நிறைவேற்றும் வகையில் மகன்கள் பைரோஸ் - சந்த் பாஷா ஆகியோர் அனுமன் கோவில் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி சந்த் பாஜா கூறுகையில், ‛‛அனுமன் கோவில் கட்டுவது என்பது எங்களுக்கு பெருமை. எங்களின் தந்தை அனுமன் கொடுத்த வரத்தால் தான் பிறந்துள்ளார். இதனால் தந்தை கோவில் கட்ட முயற்சி எடுத்தார். ஆனால் சில தடைகள் ஏற்பட்டன. தற்போது தந்தை மறைந்த நிலையில் அவரது கனவை நிறைவேற்ற நாங்கள் அனுமன் கோவிலை கட்டி வருகிறோம். இந்த கோவில் கட்ட உதவி தேவையாக உள்ளது. பக்தர்கள் சிமெண்ட், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வழங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பைரோஸ் - சந்த் பாஷா ஆகியோர் கட்டி வரும் அனுமன் கோவில் தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications