குடும்பப் பெண்ணை பலாத்காரம் செய்து “வாட்ஸப் வீடியோ”.. உ.பியில் 2 பேர் கைது
லக்னோ: உத்திரபிரதேசத்தில் குடும்பப் பெண்ணை பலாத்காரம் செய்து, அந்தக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரப்பிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
குடும்பப் பெண்ணை பலாத்காரம் செய்ததுடன் அந்த காட்சிகளை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்ட இரு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 40 வயது பெண் அந்த பகுதியில் மருத்துவ ஊழியராகவும், சமூக சேவகியாகவும் செயல்பட்டு வந்தார்.

பலாத்காரம் செய்த இளைஞர்:
கடந்த வாரம் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை பலவந்தமாக பலாத்காரம் செய்தார். அந்த காட்சியை அவர் அந்த பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அதை வாட்ஸ்அப்பில் பரவ விட்டார்.
தீக்குளித்து தற்கொலை:
இதைப்பார்த்த சமூக சேவகி அதிர்ச்சி அடைந்தார். இதில் மனம் உடைந்த அவர் கடந்த 13ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக அந்த கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மற்றொரு பெண்:
இதேநாளில் இங்குள்ள சாப்ரா மாவட்டத்திலும் தனது பலாத்கார வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால் இன்னொரு பெண்ணும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீசில் புகார்:
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் உத்தரப்பிரதேசத்தில் இதேபோல் மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக செய்தி வெளியானது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 32 வயது மதிக்கத்தக்க அந்தப்பெண் முசாபர்நகர் மாவட்டம் கட்டோலி பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
கைபேசியில் பதிவு:
"கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் கைல்வாடா கிராமத்தை சேர்ந்த இருவர் என்னை பலாத்காரம் செய்து விட்டனர். அந்த காட்சியை தங்களது கைபேசியில் வீடியோவாக பதிவு செய்துகொண்ட அவர்கள் இருவரும் அதைக்காட்டி என்னை மிரட்டி வந்தனர்.
கைது செய்ய கோரிக்கை:
அந்த வீடியோவை தற்போது சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர். எனவே, அவர்களை கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது புகாரில் அந்த பெண் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கைல்வாடா கிராமத்தின் அருகே ஒருவீட்டில் மறைந்திருந்த குற்றவாளிகள் இர்ஷாத், நசீர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications