உ.பி.யில் நாட்டுத் துப்பாக்கியால் மாணவிகளைச் சுட்ட மாணவர் தலைமறைவு : 2 மாணவிகள் காயம்
மீரட்: உத்திரப்பிரதேசத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டத்தில் இரு கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர். தலைமறைவான மாணவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநில மீரட் நகர் அருகே உள்ளது கும்ராலா கிராமம். அங்குள்ள கல்லூரி ஒன்றின் வகுப்பறையில் பாடவேளையில் நுழைந்துள்ளார் மாணவர் ஒருவர். அங்கிருந்த மாணவிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்மாணவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் மாணவிகளை நோக்கிச் சுட்டுள்ளார்.
இதில் 2 மாணவிகள் மீது குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் தப்பி ஓடி விட்டார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கியால் சுட்ட மாணவர் பெயர் சல்மான் என்று தெரியவந்துள்ளது. மேலும், முன்விரோதம் ஏதும் இல்லை, சாதாரண வாக்குவாதம் மோதலாக முற்றியதே இந்த சம்பவத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவான சல்மானை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவிகளின் பெற்றோருக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும் கல்லூரி முதல்வர் அதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்காமல் தாமதப்படுத்தினார் என மாணவிகள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications