மூட நம்பிக்கையின் உச்சம்... 20 கோடி பெண்களின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஐ.நா பகீர் தகவல்
டெல்லி: 2 வயது சிறுமி முதல் 70 வயது பாட்டி வரை இன்றைக்கு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆண்களிடம் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்காக்கிறோம் என்று கூறி சிறுமிகளின் மார்பகங்களை தட்டையாக்கியும், பிறப்புறுப்புகளை சிதைத்தும் வாழ்நாள் முழுவதும் மரண வேதனைக்கு ஆளாக்குகின்றனர். பெண்களுக்கு எதிரான இந்த கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி, 6ம் தேதியை, 'பெண்கள் பிறப்புறுப்பை அறுத்தெறியும் முறைக்கு எதிரான சர்வதேச நாள்' என, அனுசரிக்கப்படுகிறது.
'உலக நாடுகள் பலவற்றில், பெண்கள் மற்றும் சிறுமியரின் பிறப்புறுப்பை சிதைக்கும் கொடூரமான சடங்கு மற்றும் மூட நம்பிக்கை தொடர்வதால், 20 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த கொடிய பழக்கத்திற்கு எதிராக, அனைத்து தரப்பினரும் போராட முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள ஐ.நா, இதை எதிர்த்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மார்பகம் தட்டையாக்கல் என்ற கொடூரமான நிகழ்வால் 40 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சமீபத்திய ஆய்வில் தெரிவித்திருக்கிறது. அந்த அதிர்ச்சி விலகும் முன்பாக இந்த பிறப்புறுப்பு சிதைப்பினால் 20 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்படும் சிறுமிகள்
ஐ.நா.,வின் துணை அமைப்பான, 'யுனிசெப்' வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டுள்ள பெண்களில், 50 சதவீதத்தினர், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ளனர் ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் தான் இந்த பழக்கம் அதிக அளவில் உள்ளது. 98 சதவீத பெண்கள், இந்தக் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும், பெண்களுக்கு எதிரான இந்த வன்முறை தொடர்ந்தால், அடுத்த, 15 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விடும்; இது, பெண் இன அழிவுக்கே வழிவகுக்கும்எ என்றும் யுனிசெப் எச்சரித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் 7 கோடி சிறுமிகளுக்கு பிறப்புறுப்பு சிதைப்பு செய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு நாள்
இன்று பிப்ரவரி 6- பெண்கள் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு நாளாக அனுஷ்டிக்கப் படுகிறது. பெண்களுக்கு எதிரான மிகக் கொடூரமான வன்முறையாகக் கருதப்படும், பிறப்புறுப்பை அறுக்கும் சடங்கு, பல நாடுகளில் நடத்தப்படுகிறது. குறிப்பாக, ஆப்ரிக்க நாடுகளிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. சிறுமியர், 7 வயதாக இருக்கும் போதே, அவர்களின் பிறப்புறுப்புகளில் இருக்கும் சதைப் பகுதிகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. சிறுநீர் கழிக்க மற்றும் மாதவிடாய் கால கழிவுகள் வெளியேற மட்டும், ஒரு சிறிய வழி விடப்பட்டு, தைக்கப்படும்.

பாலியல் பலாத்காரம்
மத நம்பிக்கை, சமூக பாதுகாப்பு, பயங்கரவாதிகள் கையில் சிக்காமல் காப்பதற்காக என பல காரணங்களுக்காக இந்த கொடுமை சிறுமியர் மற்றும் பெண்களுக்கு நடத்தப்படுகிறது. எந்த வித பாதுகாப்பும் இல்லாமல், குடும்பத்தில் உள்ள பெண்களே, பிளேடு, கத்தி போன்றவற்றை பயன்படுத்தி, இந்த சடங்கை செய்கின்றனர்.

வாழ்நாள் முழுவதும் கொடுமை
பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதால் பெண்களுக்கு ரத்தப் போக்கு, தொற்று நோய்போன்றவை ஏற்படுகின்றன. உடலுறவின் போதும், குழந்தை பிறப்பின் போதும், மிகப் பெரிய கொடுமையை, இந்த பெண்கள் அனுபவிக்க வேண்டிஉள்ளது.

இந்தியாவிலும் கொடுமை
இதேபோன்றே பிறப்புறுப்பையும் சிதைத்து பெண்கள் வாழும் வரை மரணவலிக்கு ஆளாக்குகின்றனர். இந்தியாவிலும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. குஜராத்தில் ஒரு மதப்பிரிவினர் ரகசியமாக இது போன்ற காரியத்தில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இந்த பிரிவை சேர்ந்த பெண் ஒருவர் இது தொடர்பாக தான் சார்ந்த மதத் தலைவருக்கு கடிதம் எழுதியது இணையங்களில் வெளியானது. அப்போதுதான் இந்தியாவிலும் இந்த கொடுமை அரங்கேறுவது வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் கொடுமை
இதேபோன்று மற்றொரு கொடுமையும் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. ஆண்களுக்குப் பாலுணர்வைத் தூண்டுவது மார்பகங்கள்தான் என்று தாய்மார்கள் நினைக்கிறார்கள். அதனால் மார்பகங்களை தட்டையாக்குவதன் மூலம், ஆண்களின் கவன ஈர்ப்பில் இருந்து தப்பிவிடலாம் என்று கருதுகிறார்கள். தங்கள் பெண் குழந்தைகளின் நலன் கருதியே இந்தக் கொடூரச் செயலை செய்வதாகச் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications