2002 குஜராத் வன்முறை-மாஜி அமைச்சர் மாயா கோடானி மீதான 11 முஸ்லிம்கள் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு!
அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது நரோடா காமில் 11 முஸ்லிம்கள் படுகொலை தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோடானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவியில் ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் மதவன்முறை வெடித்தது. இந்த மதவன்முறையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற இப்படுகொலைகள் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரித்தது.

இதில் ஒன்றுதான் நரோடா காமில் 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோடானி, பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ராங்கி, விஹெச்பி தலைவர் ஜெயதீப் படேல் உள்ளிட்ட 86 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்களில் 17 பேர் வழக்கு விசாரணையின் போது மரணம் அடைந்தனர். எஞ்சிய 69 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்கே பாக்சி முன்னிலையில் இறுதி விசாரணை நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேரும் ஜாமீனில் வெளியேதான் உள்ளனர். ஏற்கனவே நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்கள் படுகொலை வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோடானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications