கார் விபத்து வழக்கு: சல்மான் கானின் ரத்த மாதிரியில் 'கலப்படம்'... வக்கீல் திடுக் புகார்!
மும்பை: நடிகர் சல்மான் கான் குடித்து விட்டுத்தான் காரை ஓட்டினார் என்பதைக் காட்டுவதற்காக அவரது ரத்த மாதிரிகளை அரசுத் தரப்பு திரித்துள்ளது என்று சல்மான் கான் தரப்பு வழக்கறிஞர் திடுக்கிடும் புகார் கூறியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு நடந்த கார் விபத்தின்போது சல்மான் கான் குடித்து விட்டு காரை ஓட்டினார் என்பதைக் காட்டுவதற்காக இவ்வாறு மோசடி செய்துள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
செப்டம்பர் 28, 2002-ல் நடந்த கார் விபத்து வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் இன்னும் முடியாமல் இழுபறியாக உள்ளது. இந்த வழக்கில் வாதிட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர் பிரதீப் காரத், காரை ஓட்டியது ஓட்டுநர் அசோக் சிங் அல்ல நடிகர் சல்மான் கான் என்று விசாரணை நீதிமன்றத்தில் உறுதிபட தன் வாதத்தை முன்வைத்தார்.
நீதிமன்றத்தில் தனது 30 பக்க அறிக்கையை முன் வைத்து வாதம் செய்த போது, "சல்மான் கான் காரின் டிரைவர் பகுதியிலிருந்து இறங்கியதை சாட்சிகள் நிரூபித்துள்ளன. நடிகரின் குடும்ப கார் டிரைவர் அசோக் சிங் காரை ஓட்டியதாக சாட்சியங்கள் ஒருவர் கூட தெரிவிக்கவில்லை என்றார். மேலும் விபத்தின் போது நடிகர் மது அருந்தியிருந்ததற்கான ரத்த சோதனை மாதிரி சாட்சியம் உள்ளது." என்றும் வாதிட்டார்.

சல்மான் தரப்பு வாதம்
அரசு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து புதன்கிழமையன்று சல்மான் கான் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது அவர் அரசுத் தரப்பு முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டை வைத்தார்.
இதுகுறித்து சல்மானின் வக்கீல் ஸ்ரீகாந்த் சிவடே கூறுகையில், சல்மான் கானின் டிரைவர் அளித்த வாக்குமூலம் பொய்யானது, அவர் பொய் சொல்கிறார் என்று அரசுத் தரப்பு கூறியது. ஆனால் சல்மான் கானை இந்த வழக்கில் போலியாக சிக்க வைத்துள்ளனர் என்றார்.

ரத்த மாதிரியில் கலப்படம்
ஒருவரது ரத்த மாதிரி குறித்து உறுதி செய்ய வேண்டுமானால் ஒரு மருத்துவரின் முன்னிலையில்தான் அதைச் செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதுகுறித்து போலீஸார் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மும்பையின் பந்த்ரா பகுதியில் நடந்த கார் விபத்துக்குப் பின்னர் சல்மானின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் மும்பை போலீஸ் கலப்படம் செய்துள்ளது

சல்மான் கான் ரத்தம்
போலீஸாருக்கும், மருத்துவத்துறையினருக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதையும் இந்த வழக்கில் போலீஸாரும், மருத்துவர்களும் நடந்து கொண்ட முறை காட்டுகிறது. அருகில் உள்ள பாபா மருத்துவமனையில் சல்மானின் ரத்தத்தை எடுக்கவில்லை. மாறாக, தொலைதூரத்தில் உள்ள அரசின் ஜேஜே மருத்துமனைக்கு சல்மானை அழைத்துச் சென்று ரத்தம் எடுத்துள்ளனர். இது ஏன் என்பதை அரசுத் தரப்பு விளக்க வேண்டும்.

போலீசின் திருட்டுத்தனம்
பாபா மருத்துவமனை நல்ல மருத்துவமனைதான், அங்கு எல்லா வசதியும் உ்ளது. ஆனால் அங்கு ரத்தம் எடுக்கவில்லை. மேலும் எடுக்கப்பட்ட ரத்த மாதிரியிலும் திருத்தம் செய்துள்ளனர். முறைகேடு செய்துள்ளனர். அவர் குடித்து விட்டு வண்டியை ஓட்டியது போல சித்தரிப்பதற்காக ரத்த மாதிரியில் திருட்டுத்தனம் செய்துள்ளனர் என்று வாதிட்டார் அவர்.












Click it and Unblock the Notifications