21 வயதில் 10 லட்சம் ரூபாய் கார் வாங்கிய இளைஞர்! படிப்பது BSc, பாடம் எடுப்பதோ IAS!
காசர்கோடு: பிஎஸ்சி படிக்கும் மாணவர் ஒருவர் ஐஏஎஸ் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்களுக்கு யூடியூப் மூலம் பாடம் நடத்திச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு 10 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கிய செய்தி கேர மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் வசித்துவரும் மாணவர் சயோஜ். இவருக்கு 21 வயதுதான் ஆகிறது. இவர் கேரளாவில் நன்கு அறியப்படும் ஒரு யூடியூபர். அந்தச் சானல் மூலமாக ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்.

இவர் வகுப்பு எடுக்கும் முறை மிகச் சிறப்பாக இருக்கும் என்பதால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இவரது வீடியோக்களை அதிகம் பார்த்து வருகின்றனர். இந்த இளைஞர் சிவில் சர்வீஸ் தேர்வு மட்டுமல்ல; ஆப்டிட்யூட் தேர்வு (CSAT), வரலாறு, புவியியல் எனப் பல பாடங்களை நடத்தி வருகிறார்.
அந்த யூடியூப் முலம் வந்த வருமானத்தைக் கொண்டு 10 லட்ச ரூபாய்க்கு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்தச் செய்தி அவர் படித்துவரும் கல்லூரியைக் கடந்து கேரளாவில் வைரல் செய்தியாக மாறியுள்ளது. காசர்கோட்டிலிருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு மலைக் கிராமம்தான் ராஜபுரம். அங்கே உள்ள செயின்ட் பயஸ் எக்ஸ் கல்லூரியில்தான் இந்த இளைஞர் படித்து வருகிறார்.
சில நாட்கள் முன்னதாக சயோஜ் படிக்கும் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக வேலை பார்த்து வரும் ஷினோஷ், இறுதியாண்டு இளங்கலை மாணவரான சயோஜ் எஸ். சந்திரனை தொலைபேசியில் அழைத்து, நுண்ணுயிரியல் பாடங்கள் தொடர்பாக எழுதிய புத்தகங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு இன்னும் ஒருநாள்தான் காலக்கெடு உள்ளது.
ஆகவே தவறவிட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு சயோஜ், தான் கார் வாங்கப் போவதால் குறிப்பிட்ட அன்று கல்லூரிக்கு வரமாட்டேன் என்று கூறி பேராசிரியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்
அது பற்றிப் பேசிய பேராசிரியர்,"அவன் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். பெற்றோர் கார் வாங்கப் போனால், அதற்காக நன்றாகப் படிக்கும் சயோஜ் ஏன் கல்லூரிக்கு வராமல் இருக்க வேண்டும்? காலக்கெடு முடிந்துபோனால் பின்னர் சாக்குப்போக்கு சொல்ல முடியாது என்று நான் சொன்னேன்" என்கிறார்.
"ஆரம்பத்தில் நான் கற்றுக்கொண்டதை மற்ற மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என் சேனலை தொடங்கினேன்" என்கிறார் சாயோஜ். இந்த சாதனை இளைஞரின் தந்தை சந்திரன் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது அம்மா சதி சந்திரன் சமூக சேவகராக உள்ளார்.

சாயோஜ் கடந்த 2022 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்து முடிந்த பிறகு, மருத்துவராவதற்காக நீட் தேர்வை எழுதினார். ஆனால் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. ஆகவே தன் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 35 கிமீ தூரமுள்ள கல்லாறு பஞ்சாயத்தில் உள்ள ராஜபுரம் செயின்ட் பயஸ் எக்ஸ் கல்லூரியில் போய் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் சேர்ந்தவுடன் இவரது லட்சியம் மாறியது. புதியதாக ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவு முளைத்தது. அதற்காக 2 ஆங்கில பத்திரிகைகளுக்குச் சந்தா கட்டி படிக்க ஆரம்பித்தார். நிறையக் குறிப்புகளை எடுக்கத் தொடங்கினார்.
"முதலில் ஆங்கில பத்திரிகையைப் படிக்கத் தொடங்கிய போது புதிய புதிய ஆங்கில வார்த்தைகள் கஷ்டமாக இருந்தது. அதன்பின்னர் ஆங்கிலம் கற்க வேண்டி நாவல்களைப் படிக்கத் தொடங்கினேன். நிறைய ஆங்கிலப் படங்களைப் பார்த்து அதில் வரும் உரையாடல்கள் மூலம் மொழியைக் கற்றேன். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சசி தரூர் பேச்சுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே விடாமல் கேட்டுப் பழகினேன்" என்கிறார் சயோஜ்.
ஐஏஎஸ் தேர்வுகளுக்கான பாடங்களை மிக எளிமையாக பிபிடி தயாரித்து அதனைக் கொண்டு விளக்கம் அளிக்கும் வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ளார் சயோஜ். அதை இஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக பக்கங்களில் விடாமல் பகிர்ந்து வந்துள்ளார். வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும் பகிர்ந்துள்ளார். அதன் மூலம் சானல் பிரபலமானது.
முதலில் தன் சானலுக்கு எஸ்சி ஐஏஎஸ் அகாதெமி எனப் பெயர் வைத்துள்ளார். அந்த அகாதெமி என்ற வார்த்தை கொஞ்சம் ஆடம்பரமாகத் தெரிந்ததால், ஐஏஎஸ் ஹப் மலையாளம் என்று மாற்றியுள்ளார். 2 மாதங்களில், 10,000 பேர் பின் தொடர தொடங்கியுள்ளனர். அப்படியே பலருக்கு ஆன்லைன் மூலம் தனியாக வகுப்பும் எடுத்து வந்துள்ளார்.
இன்றைக்கு அந்த யூடியூப் கொடுத்த வருமானத்தைக் கொண்டு, 10 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கி, கேரளாவையே ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications