70 கோடி மக்களின் பணம் வெறும் 22 பெரும் கோடீஸ்வரர்களிடம் இருக்கு.. இதுதான் மோடி ஆட்சி: ராகுல் காந்தி
ஜெய்ப்பூர்: 70 கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணம், வெறும் 22 பெரும் பணக்காரர்களிடம் உள்ளது என காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்காக பல்வேறு வியூகங்களை அமைத்து தேர்தல் பணியாற்றி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராகுல், "வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவை நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால், நம் நாட்டு ஊடகங்களை பொறுத்தவரை அம்பானி குடும்பத்தில் நடக்கும் திருமணம்தான் மிகப் பெரிய செய்தியாக இருக்கிறது. பொதுமக்களின் குரலை உயர்த்துவதுதான் ஊடகங்களின் வேலை. ஆனால், அதைச் செய்ய அவர்களின் கோடீஸ்வர உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தலித் மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாட்டின் ஊடகங்கள் வெறும் 15 - 20 பேரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இவர்கள் இரவும் பகலும் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பாடுகிறார்கள். ஊடகங்களில் 24 மணி நேரமும் நரேந்திர மோடியின் முகத்தை நீங்கள் பார்ப்பீர்கள். நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவு பணம், வெறும் 22 பெரும் பணக்காரர்களிடம் இருக்கிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என நமது விவசாயிகள் போராடுகிறார்கள். வேலைவாய்ப்பு வேண்டும் என நமது இளைஞர்கள் கேட்கிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என நமது பெண்கள் கேட்கிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை கேட்கும் விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதிகள் என்கிறார்.
ஆனால் 15 - 20 தொழிலதிபர்களின் ரூபாய் 16 லட்சம் கோடி கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். அந்த பணத்தை 24 ஆண்டுகளுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியத்திற்கு பயன்படுத்தி இருக்கலாம். பணக்காரர்களுக்கு ஒன்று, ஏழைகளுக்கு என்று இரண்டு இந்தியா உருவாகி வருகிறது" எனக் குற்றம்சாட்டிப் பேசியுள்ளார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications