23 வயது பெண் 2 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தறுத்து கொலை
உத்தரகாசி: உத்தரகண்ட் மாநிலத்தில் 23 வயது பெண் ஒருவர் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த நபர்கள் அப்பெண்ணின் உடலுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவரை அமர்தீப் என்பவர் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற பெயரில் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி அழைத்துச் சென்றுள்ளார். அவர் அப்பெண்ணை தனது நண்பர் அஜய் சிங்குடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து அவரது கழுத்தை அறுத்துக் கொன்றார். அதன் பிறகு அப்பெண் வைத்திருந்த செல்போன், அவர் அணிந்திருந்த காதணிகளை எடுத்துக் கொண்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர்.
இதற்கிடையே அப்பெண்ணை காணவில்லை என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் ராதி காட்டுப்பகுதியில் அந்த பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அவர்கள் இறந்த பெண்ணின் செல்போனை டிராக் செய்து குற்றவாளிகளை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.