எல்லையில் திடீர் மாற்றம்.. 2 நாட்களில் 250+ பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்! பஹல்காம் தாக்குதல் எதிரொலி
டெல்லி: காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து பலரும் இந்தியாவில் இருந்து வெளியேறி வரும் நிலையில், வாகா மற்றும் பஞ்சாப் எல்லை வழியாக எத்தனை பேர் நாடு திரும்பினர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். காஷ்மீர் அழகைச் சுற்றிப் பார்க்க வந்த 26 சுற்றுலாப் பயணிகள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது அறியப்படுகிறது. இதையடுத்து பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது.

பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்
அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேறி வருகிறார்கள்.
அதன்படி கடந்த இரண்டு நாட்களில் அட்டாரி- வாகா எல்லை வழியாகச் சுமார் 272 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 12 வகையான குறுகிய கால விசா வைத்துள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில், கடைசி சில மணி நேரத்தில் மேலும் சில நூறு பேர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாடு திரும்பும் இந்தியர்கள்
பாகிஸ்தானியர்களின் விசாவை இந்தியா ரத்து செய்திருந்த நிலையில், அதற்குப் பதிலடியாக பாகிஸ்தானும் இந்தியர்களின் விசாவை ரத்து செய்தது. மேலும், பாகிஸ்தானில் வசித்த இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டது. அதன்படி பஞ்சாப்பில் அமைந்துள்ள சர்வதேச எல்லை வழியாக 13 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 629 இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து திரும்பியுள்ளனர்.
அதேபோல மருத்துவ விசா மூலம் இந்தியா வந்துள்ளவர்கள் ஏப்ரல் 29ம் தேதியுடன் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம் மருத்துவச் சிகிச்சை இருப்பதால் மருத்துவ விசாவில் வருவோரை மட்டும் தங்க அனுமதிக்க வேண்டும் எனச் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் நாட்டினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், மத்திய அரசு இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
என்ன நடந்தது
கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு உள்ள அழகிய பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசித்து வந்தனர். அப்போது திடீரென அங்கு நுழைந்த தீவிரவாதிகள், சுற்றுலாப் பயணிகளைச் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியுள்ளனர். மொத்தம் 5 தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. வெறும் சில நிமிடங்களில் அவர்கள் பலரையும் சுட்டுத் தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
தீவிர விசாரணை
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்குப் பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ளது. மேலும், என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாலேயே அந்நாட்டு அரசுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications