2ஜி முறைகேடு வழக்கு: 5 முக்கிய சாட்சிகளை விசாரிக்க தடை கோரிய மனு தள்ளுபடி
டெல்லி: டெல்லியில் நடைபெற்று வருகின்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் 5 முக்கிய சாட்சிகளை விசாரிக்க தடை கோரிய மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் 153 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, பெரு நிறுவனங்களின் தரகர் நீரா ராடியா, அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி உள்ளிட்டோர் பங்கேற்று அளித்த சாட்சியங்கள் 4,400 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டன.
எதிர் தரப்பில் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வியின் முன்னாள் இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 29 பேர்களின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங், உதவி இயக்குனர் சத்யேந்திர சிங், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரி நவில் கபூர், வங்கி அதிகாரி டி.மணி மற்றும் கலைஞர் டி.வியின் நிதித்துறை பொது மேலாளர் ஆகியோரிடம் மேலும் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு சி.பி.ஐ தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தனிநீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அந்த 5 சாட்சியங்களை விசாரிக்க அனுமதி வழங்கினார்.
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான ராஜீவ் பி.அகர்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன் ஆஜராகி வாதாடினார்.
அவர் தன்னுடைய வாதத்தில், "இந்த வழக்கில் அனைத்து சாட்சியங்களின் பதிவுகளும் முடிவடைந்த நிலையில் தனிக்கோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவு ஏற்கத்தக்கது அல்ல. எனவே சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறினார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் தனிக்கோர்ட்டின் உத்தரவில் சுப்ரீம் கோர்ட் தலையிடுவதற்கு விருப்பமில்லை என்று தெரிவித்தனர்.
அப்போது, "தங்கள் மனுவின் மீது இடைக்கால உத்தரவாவது பிறப்பிக்க வேண்டும்" என்று மனுதாரர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அந்த வேண்டுகோளை நிராகரித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், இவ்வழக்கினைத் தொடர்ந்து விசாரிக்கும் பொறுப்பினை சிபிஐயின் புதிய தலைமை அதிகாரியான அனில் குமார் சின்காவிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.