காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் 3 எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் பலி: 6 பேர் படுகாயம் !
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வரும் வீரர்கள் சிலர் விடுப்பில் சென்றிருந்தனர். இந்நிலையில் விடுமுறை முடிந்த வீரர்கள் இன்று பணிக்கு திரும்பினர். இதற்காக 23 வாகனங்களில் அவர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

மாலை 4.30 மணியளவில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பிஜ்பெஹரா அருகே வந்தபோது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் வாகனங்களில் வந்த எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த எல்லைப் பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் ஷர்மா சம்பவ இடத்திற்கு விரைந்தார். மத்திய ரிசர்வ் படை மற்றும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் வீரர்கள் அடங்கிய கூடுதல் படையும் விரைந்தது.
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் புர்ஹான் வானி தலைமையிலான ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications