32 மணி நேரம் நீடித்த டிராபிக் ஜாம்! 8 கி.மீக்கு அணிவகுத்த வாகனங்கள்.. ஸ்தம்பித்த ம.பி.. 3 பேர் பலி
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 32 மணி நேரமாக நீடித்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்துார் - தேவாஸ் நெடுஞ்சாலையில் 8 கிமீ தூரத்துக்கு 32 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் தேவாஸ் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோன்று சர்வீஸ் சாலையிலும் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று அந்த சாலையில் வாகனங்கள் வந்துகொண்டிருந்த நிலையில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஏற்கனவே கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் அன்று அப்பகுதிகளில் மிக கனமழை பெய்ததால் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோன்று அப்பகுதியில் மாற்று வழியில் செல்லவும் வழி இல்லை. மங்கலியா மற்றும் அர்ஜுன் பரோடா இடையேயான சாலையில் தான் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம், 2 மணி நேரம் இல்லை 32 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீர் செய்ய முயன்றும் நிலைமை சீராகவில்லை. மொத்தம் 8 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சந்தீப் பட்டே (வயது 32), பலராம் படேல் (55), கமல் பஞ்சால் (65) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இவர்கள் 3 பேரும் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த போக்குவரத்து நெரிசல் பற்றி பிஜல்பூரைச் சேர்ந்த (இந்தூர்) உயிரிழந்த கமல் பஞ்சாலின் மகன் விஜய் பஞ்சால் கூறுகையில், "நான் எனது தந்தை, தாய் மற்றும் மனைவியுடன் எனது அத்தையின் 13-வது நாள் சடங்கில் கலந்து கொள்வதற்காக தேவாஸ் மாவட்டத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது இந்தூர்-தேவாஸ் பைபாஸில் உள்ள மங்கலியா மற்றும் அர்ஜுன் பரோடா இடையேயான சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கினோம். பொதுவாக இந்த தூரத்தை கடக்க 15-20 நிமிடங்கள் ஆகும் என நினைத்தோம். போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது, எனது தந்தை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
அங்கு எந்த அதிகாரிகளும் இல்லாததால், உள்ளூர் மக்களின் உதவியுடன் அந்த நெரிசலில் இருந்து வெளியேற ஏறக்குறைய அரை மணி நேரம் ஆனது. தேவாஸில் உள்ள மருத்துவமனைக்கு நாங்கள் சென்றடைந்தபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். அதே நெரிசலில் சிக்கி மேலும் இரண்டு பேர் இறந்ததாக பின்னர் அறிந்தோம். தூங்கிக் கொண்டிருக்கும் நிர்வாகம் விழித்தெழ இன்னும் எத்தனை உயிர்களை எடுக்கப் போகிறதோ" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்தியபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications