“ஷாக்”.. 2 இந்திய ராணுவ வீரர்கள், டிஎஸ்பி சுட்டுக்கொலை! பயங்கரவாத தாக்குதலால் பதற்றத்தில் காஷ்மீர்
ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் நமது ராணுவ கர்னல் உட்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.
காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் மாவட்டம் பதற்றம் நிறைந்த பகுதியாகும். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நிறைந்த இப்பகுதியில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதும், ரோந்து செல்வதும் வாடிக்கை. இங்கு அடிக்கடி பயங்கரவாதிகளுக்கும், நம் ராணுவ வீரர்கள் இடையே மோதல் சம்பவங்கள் நடைபெறும்.

இந்த நிலையில் இன்று ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் ஆனந்த்நாக் மாவட்டம் கோகெர்நாக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே நீடித்த இந்த தாக்குதலில் நம் வீரர்கள் மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்.
அதில் ஒருவர் ராணுவ கர்னல் மன்பிரீத் சிங். மற்றொருவர் மேஜர் ஆஷிஷ். இவர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காஷ்மீர் காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஹுமாயுன் பட்டும் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி உள்ளார். இதில் போலீஸ் டிஎஸ்பி ஹுமாயுன் அதிகளவிலான ரத்தம் வெளியேறியதால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரின் கடோலே பகுதியில் செவ்வாய் கிழமை பயங்கரவாதிகளுக்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட ராணுவமும், காஷ்மீர் காவல்துறையும் முடிவு செய்து இருக்கிறது. ஆனால், நேற்று இரவு அந்த திட்டத்தை கைவிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து இருக்கிறது.
அதன் அடிப்படையில் காலை பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ராணுவம் இறங்கி இருக்கிறது. இந்த ஆபரேசனில் இறங்கிய குழுவிற்கு கர்னல் சிங் முன் நின்று தலைமை தாங்கி வழிநடத்தி சென்று இருக்கிறார். அப்போது பயங்கரவாதிகளின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த குண்டு கர்னல் சிங்கின் உடலை துளைத்து உயிரை பறித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் 3 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications