ஆண்டாள் மாலை சூடி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா- 3 லட்சம் பேர் தரிசனம்
திருப்பதி: திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளான நேற்று மாலை கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. உற்சவரான மலையப்ப சுவாமி, கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலையில் குவிந்து கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்களை தரிசனம் செய்தனர்.
கருடனை பகவான் மகா விஷ்ணு, 'வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.

கருடனின் பெருமை
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5ம் நாள் மிக முக்கியமானதொரு நாளாகக் கருதப்படுகிறது. தன் பக்தன் தனக்காக எதையும் கேட்காமல், உலக மக்களுக்காகவே கேட்கிறானே என மனம் மகிழ்ந்த பெருமான், கருடாழ்வாரின் சிறப்பு தெரியவேண்டும் என்பதற்காகவே பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். உங்கள் குறையை கருடனிடம் சொல்லுங்கள்; நேரம் பார்த்து அதைத் திருமாலிடம் சொல்லி, உங்களுக்கு அவரின் வரங்களைப் பெற்றுத் தருவார். மகாபாரதப் போரின் கடைசி நாள் போரில், கருட வியூக யுத்தத்தால்தான் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்.

திருப்பதி பிரம்மோற்சவம்
உற்சவரான மலையப்ப சுவாமி நேற்று காலை மோகினி அவதாரத்தில் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உடன் சிறிய கிருஷ்ணர் அவதாரத்திலும் சுவாமி பவனி வந்தார். இரு பல்லக்குகளில் மாட வீதிகளில் பவனி வந்த உற்சவ மூர்த்திகளை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவிந்தா..கோவிந்தா.. என முழக்கமிட்டனர்.

கருடவாகன சேவை
காலையில் மோகினி அவதாரத்தில் காட்சி அளித்த ஏழுமலையான், இரவில் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருட சேவையை காண காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இதன் காரணமாக சர்வ தரிசனத்துக்கு 25 மணி நேரம் ஆனது. பாத யாத்திரையாக வந்த பக்தர்கள், திவ்ய தரிசனம் செய்வதற்கு 17 மணி நேரம் ஆனது. நேற்று 3 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ததாக புள்ளி விபரம் கூறுகிறது.

கூட்ட நெரிசல்
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், நேற்று மதியம் திருமலையில் பக்தர்கள் சில நிமிடங்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தடுப்பு கம்பிகளை அகற்றி முன்னேறிச் சென்ற பக்தர்கள் நெரிசலில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்தனர். திருமலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications