காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெறுவதால் ஸ்ரீநகரில் பாதுகாப்புக்காக எப்போதும் போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீநகர் அருகே உள்ள சடிபால் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த துணை சப்-இன்ஸ்பெக்டர் குலாம் முகமது மற்றும் நாசிர் அகமது ஆகியோர் ரோந்து பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

நேற்று காலை சுமார் பத்தரை மணியளவில் அங்கு வந்த தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயடைந்த போலீசார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல், காஷ்மீரின் அடித்தட்டு மக்கள் அமைப்பு ஒன்றின் தலைவரான முகமது அப்துல்லா சத்வால் என்பவருக்கு பாதுகாவலராக முகமது சாதிக் என்ற காவலர் பணியாற்றி வந்தார். இவர்கள் நேற்று மதிய வேளையில் டெங்போரா பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் முகமது சாதிக் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் காயமடைந்த முகமது சாதிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தாக்குதலுக்கு, ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது போல மேலும் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் அந்த தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீநகரில் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications