நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது: ராஜ்நாத்தை சந்தித்த பின் வைகோ பேட்டி
டெல்லி: நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது என்று டெல்லியில் ராஜ்நாத்தை சந்தித்த பின்னர் மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங்கை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று சந்தித்து பேசினார். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது.
மதிமுக ஒருங்கிணைப்பு குழு
இரு கட்சிகளிடையேயும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றும் வருகிறது. சென்னை வண்டலூரில் நடைபெறும் மோடி பொதுக் கூட்டம் தொடர்பாக மதிமுக சார்பில் ஒருங்கிணைப்புக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ராஜ்நாத்துடன் சந்திப்பு
இந்நிலையில் டெல்லி சென்றிருந்த வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்து பேசினார். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகிழ்வான சந்திப்பு- ராஜ்நாத்சிங்
இந்த சந்திப்பு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ராஜ்நாத்சிங், மதிமுக தலைவர் வைகோவை இன்று சந்தித்தேன். 2014 லோக்சபா தேர்தல் தொடர்பான இந்த சந்திப்பு மகிழ்ச்சி அளித்தது என்று தெரிவித்திருக்கிறார்.
மோடி அலை வீசுகிறது..
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது என்றார்.