சத்தமாக பாட்டு கேட்டதால் தகராறு: 30 வயது இளைஞரை சுட்டுக் கொன்ற ஜிம் மாஸ்டர்
டெல்லி: டெல்லியில் சப்தமாக பாட்டு கேட்டவரிடம் சப்தத்தை குறைக்குமாறு கூறிய நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப்(30). யுஜிசி நடத்தும் ஆய்வு நிறுவனமான இன்டர்-யூனிவர்சிட்டி ஆக்சிலரேட்டர் சென்டர் வெளியிடும் பத்திரிக்கையின் ஆசிரியர். ஹர்தீப் தனியார் தொலைக்காட்சி சேனலிலும் பணியாற்றி உள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு ஹர்தீப் தனது அபார்ட்மென்ட்டில் இருந்துள்ளார். அப்போது ஜிம் மாஸ்டரான ரிங்கு(27) என்பவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து ஜிம்மில் அமர்ந்து மது அருந்திக் கொண்டு சப்தமாக பாட்டு கேட்டுள்ளார்.
ஹர்தீப் ஜிம்மிற்கு சென்று பாட்டின் சப்தத்தை குறைக்குமாறு ரிங்குவிடம் கூற அவர் மறுத்துள்ளார். இதையடுத்து ஹர்தீப் அங்கிருந்து சென்றுவிட்டார். உடனே ரிங்கு தனது நண்பர்களுடன் ஹர்தீப்பின் அபார்ட்மென்ட்டிற்கு சென்று அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
ரிங்கு ஹர்தீப்பை அடித்து நொறுக்கியதுடன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். பின்னர் ரிங்கு தனது நண்பர்களுடன் தப்பியோடிவிட்டார். ஹர்தீப்பை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிங்குவை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications