இலங்கை திருக்கோயில் போலீஸ் நிலைய துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் பலி: என்ன நடந்தது அங்கே?
இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீசார் உயிரிழந்தனர்.
குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த - போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
நேற்றிரவு 11.40 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பிபிசி தமிழிடம், திருகோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் போலீசார் மூவர் உயிரிழந்தனர். காயமுற்று வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரு போலீஸ் உத்தியோகத்தர் பின்னர் உயிரிழந்தார்.
- இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அறிவிப்பு
- இலங்கையில் சிறுபான்மை சமூகத்துக்கு தொடரும் அச்சுறுத்தல்: ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்
இதேவேளை, திருக்கோவில் போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம மற்றும் போலீஸ் உத்தியோகத்தர் இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்ன நடந்தது?
திருக்கோவில் போலீஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றி வந்த சார்ஜன்ட் தரத்திலுள்ள குமார எனும் போலீஸ் உத்தியோகத்தரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பிபிசி தமிழிடம் அங்குள்ள போலீசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு சம்பவம் நடந்தபோது போலீஸ் நிலையத்தில் சிலரே கடமையில் இருந்ததாகவும், சார்ஜன்ட் குமார என்பவர் - போலீஸ் நிலையத்தில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியதாகவும் அங்குள்ள போலீஸ் உத்தியோகத்தர்கள் கூறுகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது நிலையப் பொறுப்பதிகாரி அங்கு இருக்கவில்லை என்றும், இவ்வாறான ஒரு தாக்குதல் நடப்பதை அறிந்து கொண்ட அவர், தனது ஜீப் வண்டியில் ஓட்டுநருடன் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தபோது, அவர் பயணித்த வண்டியின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பிசிசியிடம் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர்
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் மூவர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது. போலீஸ் உத்தியோகத்தர்களான பிரபுத்த, நவீணன் ஆகியோரும் போலீஸ் ஓட்டுநர் துஷார என்பவரும் இவ்வாறு பலியாகினர்.
பின்னர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட காதர் எனும் போலீஸ் உத்தியோகத்தரும் உயிரிழந்தார்.
இதேவேளை போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம, போலீஸ் ஓட்டுநர் குமார் மற்றும் சார்ஜன்ட் கந்தசாமி ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிசிக்சை பெற்ற வருகின்றனர்.
சூடு நடத்தியவர் தப்பினார்
மேற்படி தாக்குதலை நடத்திய சார்ஜன்ட் குமார என்பவர், இந்தத் தாக்குதலை நடத்திய பின்னர், போலீஸ் நிலையத்திலிருந்த இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 19 துப்பாக்கி ரவைக் கூடுகளை எடுத்துக் கொண்டு, தனது சொந்த வண்டியில் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தப்பித்தவர் மொனராகல மாவட்டதிலுள்ள எதிமல பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். எதிமல அவரின் சொந்த ஊர் என்றும், அங்குதான் அவரின் வீடு அமைந்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
ரி56 துப்பாக்கிகள் இரண்டு, தோட்டா ரவைக் கூடுகள் 19 - ஆகியவற்றுடன் மேற்படி நபர் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- ’83’ படத்தில் ரன்வீர் சிங்கை பார்த்தால் அவர் கபில்தேவ் என்றே சொல்வார்கள் - மதன் லால்
- ஆயுள் கைதிகள் முன்விடுதலையை ஆராய அரசு குழு: 34 ஆண்டுகளை கடந்தவர்களுக்கு பலன் உண்டா?
- 83 திரைப்படம்: விமர்சனம்
- இந்தியா 1983 உலக கோப்பையை வென்றது எப்படி? முந்தைய உலக கோப்பைகளில் இந்தியா எப்படி செயல்பட்டது?
- "நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்" - அண்ணாமலை பேட்டி
- இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்















Click it and Unblock the Notifications