ஆந்திராவில் கொடூரம்.. விஷம் வைத்து 45 குரங்குகள் கொலை.. வனத்துறை விசாரணை
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 45 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் கிராமத்திற்கு அருகில் வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது குரங்குகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. குட்டிகள் உள்பட 45 குரங்குகள் குவியலாக இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் குரங்குகளின் உடல்களை கைப்பற்றினர். பின்னர் கால் நடை மருத்துவர்கள் மூலம் அங்கேயே அந்த குரங்குகளின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. குட்டிகள் உள்பட மொத்தம் 45 குரங்குகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அந்த குரங்குகள் சிலகம் கிராமத்தை சேர்ந்த குரங்குகள் இல்லை என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

எனவே வேறு இடத்தில் அந்த குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு பின்னர் ஏதேனும் வாகனங்கள் மூலம் இந்த வனப்பகுதியில் போட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போல் கடந்த ஆண்டு பெங்களூருவில் ஹாசன் மாவட்டத்தில் 38 குரங்குகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அது போல் இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள் மேலும் 40 குரங்குகள் கொல்லப்பட்டன. இவற்றிற்கு வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications