அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு: 49 பேர் குற்றவாளிகள்.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அகமதாபாத்: அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் 49 பேர் குற்றவாளிகள் என குஜராத் சிறப்பு கோர்ட் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை நாளை(பிப்.,9) வழங்கப்பட உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் 2008 ஜூலை 26ல் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 70 நிமிடத்துக்குள் 21 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 56 பேர் இறந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இதுகுறித்துஅகமதாபாத் போலீசார் 20 வழக்குகள் பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர்.
அடுத்த 2 நாளில் சூரத்தின் பல இடங்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

பயங்கரவாத அமைப்பு
2002ல் நடந்த கோத்ரா கலவரத்துக்கு பழிவாங்கும் வகையில் இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டி குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கு குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. குண்டுவெடிப்பு தொடர்பாக 77 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கு தொடர்பாக 1100 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 26 பேர் முக்கிய சாட்சிகளாக எடுத்து கொள்ளப்பட்டனர்.

49 பேர் குற்றவாளிகள்
13 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கில் சிறப்பு நீதிபதி ஏ.ஆர்.பட்டீல் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது, சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததால் 28 பேர் விடுதலை செய்வதாகவும், மற்ற 49 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான தண்டனை விபரம் நாளை (பிப்.,9) அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.

வீடியோ கான்பரன்ஸ்
இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை பாதுகாப்பு காரணங்களுக்காக சபர்மதி சென்ட்ரல் சிறையில் நடத்தப்பட்டது. அதன்பிறகு வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்றைய விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறு சிறைகளில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் ஆஜராகினர்.

சிறை வாரியாக
சிறை வாரியாக அகமதாபாத்தில் இருந்து 49 பேர், மத்திய பிரதேசத்தில் 10, மும்பையில் 4 , பெங்களூரில் 5, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், பீகார் சிறைகளில் இருந்து தலா 2 பேர், ஆமதாபாத் அரசு மருத்துவமனையில் இருந்து ஒருவர் என மொத்தம் 77 பேர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications