'ஷாக்..' காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்.. 5 வீரர்கள் வீர மரணம்
ஸ்ரீநகர்: காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாகவே பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர்.
பண்டிகை காலத்தைக் குறிவைத்து இந்தியாவில் பயங்கரவாதிகள் அசம்பாவித சம்பவங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத் துறை எச்சரித்திருந்தது. அதற்கேற்ப ஊடுருவல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை வெளுக்கும் - பத்திரமா இருங்க மக்களே
இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை அடுத்துள்ள சூரங்கோட் பகுதியில் உள்ள டேரா கி ஹாலி என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராமத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரை நோக்கி, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு ராணுவ அதிகாரி, 4 வீரர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். எல்லையில் சூரன்கோட் முகலாய சாலை அருகே அமைந்துள்ள காடுகளின் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சாம்ரர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்குக் கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
எல்லையில் உள்ள காட்டுப் பகுதியில் 4 அல்லது 5 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் அங்குத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.