மண்டேலா மறைவுக்கு 5 நாள் அரசு முறை துக்கம்... மத்திய அரசு
டெல்லி: தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பர் இன அதிபரும், தென் ஆப்பிரிக்காவின் இனவெறிக் கொடுமைக்கு எதிராக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவில் 5 நாள் அரசு முறைத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான முடிவை இன்று மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் எடுத்தது. அமைச்சரவைக் கூட்டத்தில் மண்டேலாவின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், மண்டேலா உயர்ந்த தலைவர். அவருடைய தலைமுறைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் உகந்த பெரும் தலைவர். அவருடைய கடுமையான போராட்டத்தால்தான் இனவெறிக் கொடுமையிலிருந்து அவரது நாடு விடுபட முடிந்தது. அது மிகவும் அசாதாரணமானது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர் மண்டேலா. உலகுக்கு தலைமைத்துவத்தின் அருமையையும், மாண்பையும் எடுத்துக் காட்டிய பெரும் தலைவர் மண்டேலா.
ஒட்டுமொத்த இந்திய மக்களும், தென் ஆப்பிரிக்க மக்களின் துயரத்தில் துணை நிற்கின்றனர். அவரது மறைவுக்கு நாடே அஞ்சலி செலுத்துகிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் மண்டேலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஐந்து நாள் அரசு முறைத் துக்கம் அனுசரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications