உத்தரகாண்ட் வெள்ளம்: நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி – கேதார்நாத் யாத்திரை ரத்து
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் அங்கு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் கங்கோத்ரி சென்ற பாபா ராம்தேவ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு சிக்கி தவித்தனர்.
நிலச்சரிவில் 6 பேர் பலி
இந்த நிலையில் பிதோராகர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியானதாக மாவட்ட கலெக்டர் செம்வால் தெரிவித்தார்.
முதல்வர் இரங்கல்
இதனையடுத்து அங்கு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 3 பேரை படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஹரீஷ் ராவத் இரங்கல் தெரிவித்துள்ளார். இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
யாத்திரை ரத்து
மேலும் அடுத்த 48 மணிநேரத்திற்கு பேய்மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ரிஷிகேஷ், கேதார்நாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு யாத்திரையை 48 மணிநேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
யாத்ரீகர்கள் பலி
உத்தரகாண்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக பத்ரிநாத், கேதார்நாத், உத்தரகாசி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் நிலச்சரிவில் சிக்கி பலியாயினர். இதில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகினர்.
வரலாறு காணாத வெள்ளம்
வீடுகள் உள்பட கட்டிடங்கள், கோயில்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான கேதார்நாத், பத்ரிநாத் பக்தர்கள் தவித்தனர். பின்னர் அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
இந்த ஆண்டும் மழை
இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து பல மாதங்கள் நடைபெற்று வந்தன. இதன் பிறகு, உத்தரகண்டில் பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களுக்கு செல்லும் சாலைகள் சரி செய்யப்பட்டு யாத்திரை தொடங்கியது. எனினும் இந்த ஆண்டும் கனமழை பெய்து வருவதால் சார்தாம் யாத்திரை சென்றுள்ள பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications