ஐதராபாத்தில் 6 தீவிரவாதிகள் கைது... சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா?
ஐதராபாத் : பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மியான்மார் நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க அவர்கள் சதி செய்துள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் சுதந்திர தினம், நாளை கொண்டாடப்படுகிறது. அண்மையில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரிலும், காஷ்மீர் மாநிலம் உதம்பூரிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதை கருத்தில் கொண்டு, நாடுமுழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. துணை ராணுவப் படை வீரர்கள் நாடு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மியான்மார் நாட்டை சேர்ந்த 6 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் ஐதராபாத் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்ந்து உடைய தீவிரவாதி முகமத் நசீரை கைது செய்தனர். இதனையடுத்து சிறப்புபடை ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உடைய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரையும், வங்கதேசம் நாட்டை சேர்ந்த இரண்டு பேரையும், மியான்மர் நாட்டை சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த இரண்டு ஏஜெண்ட்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குற்றத்திற்குட்படக்கூடிய ஆவணங்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.