7/11 மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 5 பேருக்கு தூக்கு, 7 பேருக்கு ஆயுள்
மும்பை: 7/11 மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேரில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
2006ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி மும்பையில் ரயில்களில் குக்கர்களில் வைக்கப்பட்ட 7 வெடிகுண்டுகள் 11 நிமிடத்திற்குள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில் 189 பேர் பலியாகினர், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
7/11 ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு மகோகா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 12 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. ஒருவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் 12 பேரில் 8 பேர் மரணத்தின் வியாபாரி போன்று செயல்பட்டதாகக் கூறி அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழகக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனையும், மீதமுள்ள 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெடிகுண்டுகளை வைத்த பைசல் ஷேக், ஆசிப் கான், கமால் அன்சாரி, இஹ்திஷாம் சித்திக்கி மற்றும் நவீத் கான் ஆகிய 5 பேருக்கு தான் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தீர்ப்பையொட்டி நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சம்பவம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.