80 லட்சம் மத்திய ஊழியர்கள் பயனடையும் 7வது ஊதியக்குழு: பிரதமர் ஒப்புதல் - ப.சி அறிவிப்பு

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை திருத்தி அமைக்கவும், அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரைப்பதற்காக ஊதியக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்து வருகிறது. இந்த குழு சராசரியாக 2 ஆண்டுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும்.
மேலும், இந்த பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. அதேசமயம், இந்த குழுவின் பரிந்துரைப்படி அல்லது சிறிய திருத்தங்களுடன் மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி கடந்த 2006-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட 6-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது சம்பளம் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 7-வது ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
இதனைத் தொடர்ந்து 7-வது ஊதியக்குழு அமைக்க பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ‘7-வது ஊதியக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் காலவரையறை அனைத்தும் சம்பந்தப்பட்ட துறையினருடன் விவாதிக்கப்பட்டு விரைவில் இறுதி செய்யப்படும். இந்தக்குழு சுமார் 2 ஆண்டுகள் ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும். இந்த பரிந்துரைகள் வருகிற 1.1.2016 முதல் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் ராணுவம் மற்றும் ரெயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் கே.கே.என்.குட்டி தெரிவித்ததாவது, ‘7-வது ஊதியக்குழு அமைக்கும் மத்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த குழுவின் பரிந்துரைகளை 2011 ஜனவரி 1-ந்தேதியிட்டு வழங்க வேண்டும்.
மேலும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை திருத்தியமைக்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்க வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. அகவிலைப்படியில் 50 சதவீதத்துக்கு மேல் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும். எங்கள் இந்த கோரிக்கையை ஊதியக்குழு பரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.
5 மாநில சட்டமன்றங்களுக்கு இந்த ஆண்டு இறுதியிலும், நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு ஊதியக்குழு அமைத்துள்ளது எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications