ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: அருண் ஜேட்லி
டெல்லி: 7-வது ஊதிய குழு பரிந்துரைகளுக்கு ஒரு சில மாற்றங்களுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான நடவடிக்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி, 7-வது ஊதியக் குழுப் பரிந்துரையில் சில மாற்றங்களுடன் ஜூலை முதல் தேதியிலிருந்து அமல்படுத்த உள்ளதாகக் கூறினார்.

மேலும், ஏர் இந்தியா பங்கு விற்பனை தொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்படும். ஏர் இந்திய நிறுவனம் தனியார்மயமாக்க கொள்கை அளவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அதன் பங்குகள் முழுவதும் விற்கப்படும். ஒய்வூதியதாரர்களுக்கான மாதாந்திர மருத்துவ படி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள சியாச்சினில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான படி ரொக்கமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் ஜேட்லி தெரிவித்தார். முன்னதாக 7வது ஊதிய குழு பரிந்துரையில் வீட்டு வாடகை படி உள்பட, ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து படிகளையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசு ஊழியர்களிடம் பரவலாக எழுந்தது.
எனவே, படிகளை உயர்த்துவது தொடர்பாக நிதித்துறை செயலாளர் அசோக் லாவசா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு பல்வேறு பிரதிநிதிகளுடன் ஆலோசித்து தமது அறிக்கையை மத்திய நிதி அமைச்சகத்திடம் வழங்கியது.












Click it and Unblock the Notifications