184 ராணுவ வீரர்களை மீட்க வந்த மியான்மர் விமானம் மிசோரமில் விபத்தில் சிக்கியது- 8 பேர் படுகாயம்!
அய்ஸ்வால்: இந்தியாவில் தஞ்சம் அடைந்த 184 ராணுவ வீரர்களை மீட்க வந்த மியான்மர் விமானப் படை விமானம் மிசோரம் மாநிலம் லெங்குபி விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விபத்துக்குள்ளானது. மியான்மர் விமானத்தில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்தனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு ஆயுதக் குழுக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் ராணுவ முகாம்கள், நகரங்களை கிளர்ச்சி குழுவினர் கைப்பற்றி வருகின்றனர்.

இதனால் மியான்மர் ராணுவ வீரர்கள் அங்கிருந்து தப்பி இந்திய எல்லை கிராமங்கள் வழியாக நுழைந்து இந்திய பாதுகாப்பு படையினர் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட மியான்மர் ராணுவ வீரர்கள், இந்தியாவுக்குள் நுழைந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களை அடுத்தடுத்து மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைத்து வருகின்றனர் பாதுகாப்பு படையினர்.

இதன் ஒரு பகுதியாக 184 மியான்மர் ராணுவ வீரர்களை இந்திய பாதுகாப்பு படையினர் அந்நாட்டிடம் ஒப்படைக்க தயாராக இருந்தனர். இந்த ராணுவ வீரர்களை அழைத்து செல்வதற்காக மிசோரம் மாநிலத்தின் லெங்குபி விமான நிலையத்தில் மியான்மர் விமானப் படை விமானம் தரை இறங்கியது. அப்போது அந்த விமானம் திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 பேரில் 8 பேர் படுகாயமடைந்தனர். 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவ்விபத்தில் சிக்கி காயமடைந்த 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.














Click it and Unblock the Notifications