ராஜஸ்தானில் என் 95 மாஸ்கில் மைக்.. நீட் தேர்வில் நூதன மோசடி.. 8 பேர் கைது
ஜெயப்பூர்: ராஜஸ்தானில் என் 95 மாஸ்கில் ரகசிய மைக் வைத்து நீட் தேர்வில் மோசடி செய்ய முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக 8 பேர் சிக்கியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் மற்றும் சிகார் பகுதிகளில் மாணவர்களுக்கு பதிலாக போலியான நபர்கள் மூலம், நீட் தேர்வு எழுத வைக்கும் கும்பல் செயல்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸார் , வெவ்வேறு இடங்களில் இருந்து சில மருத்துவ மாணவர்கள் உள்பட 21 பேரை கைது செய்தனர்.

சந்தேகிக்கும் வகையில்
இவர்களிடமிருந்து சந்தேகிக்கும் வகையில் இருந்த ஏராளமான என் 95 மாஸ்குகள் கைப்பற்றினர். அவற்றை பரிசோதித்த போது போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மாஸ்குகளுக்கு உட்பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

பேட்டரி
தேர்வு அறைக்கு வெளியே இருப்பவர்களை தொடர்பு கொள்ள மாஸ்கின் உட்பகுதியில் பேட்டரி மூலம் இயங்கக் கூடிய கருவியை பொருத்தியுள்ளனர். நானோ சிம் கொண்ட இந்த கருவியில் ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வெளியே இருப்பவர்கள் பேசுவதை தேர்வு எழுதுபவர்கள் கேட்க, காதின் உட்பகுதியில் பொருத்தக் கூடிய சிறிய வடிவிலான இயர்பீஸ்களையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

ஜெய்ப்பூர்
ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைப்பதாகக் கூறி மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பேரம் பேசியதையும் ஒப்புக் கொண்டனர். இதனிடையே ஜெய்ப்பூரில் தேர்வறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட, தினேஷ்வரி குமாரி (18) என்ற மாணவி உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தேர்வறை கண்காணிப்பாளர்
விசாரணையில் தேர்வு தொடங்கியதும் தேர்வறை கண்காணிப்பாளரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் வினாத்தாளை புகைப்படம் எடுத்து சித்ரகூட் பகுதியில் தங்கியிருந்த இரண்டு பேருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியதாக கைதான மாணவி தெரிவித்தார்.

முகேஷ்
அவர்கள் சிகார் பகுதியில் வேறு சிலருக்கு வினாத்தாளை அனுப்பி, அவர்கள் மூலம் சரியான விடைகளை பெற்றுள்ளனர். அங்கிருந்து முகேஷுக்கு விடைகள் கிடைக்க அதனை வாட்ஸ் ஆப் மூலம் பெற்ற ராம்சிங், தினேஷ்வரிக்கு விடைகளை தெரிவித்துள்ளார். இதற்காக 30 லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டு, தேர்வு மைய வளாகத்திலேயே 10 லட்சம் ரூபாய் கைமாறியுள்ளது. இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications