9 பேரை பலி கொண்ட பெங்களூர்- எர்ணாகுளம் ரயில் தடம் புரண்ட விபத்துக்கு ஓட்டுநரின் அலட்சியம் காரணமா?
ஆனைக்கல்: 9 பேரை பலி கொண்ட பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் தடம் புரண்டதற்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என்று கூறப்படுகிறது. தண்டவாளத்தில் பாறங்கல் விழுந்ததால் விபத்து என்று முதலில் தகவல் வெளியாகி இருந்த போதும் தண்டவாளத்தின் இருபுறமும் மண்மேடுதான் இருப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து நேற்று காலை 6.15 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கிப் புறப்பட்ட பெங்களூரு- எர்ணாகுளம் இன்டர்சிட்டி விரைவு ரயில் ஆனைக்கல் அருகே பிதரகெரே பகுதியில் காலை 7.33 மணியளவில் வந்தபோது அதன் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.
பெங்களூருவிலிருந்து 45-ஆவது கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்த இவ் விபத்தில் 9 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டன. இதில் 9 பேர் உயிரிழந்தனர்.

87 பேர் படுகாயம்
ஆனைக்கல் பொது மருத்துவமனை, நாராயண ஹிருதயாலயா மருத்துவமனை, ஸ்பர்ஷ் மருத்துவமனைகளில் 17 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 70 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

மீட்பு பணி
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள், காவல் துறை, தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். பெங்களூரு மற்றும் ஓசூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் குழுவினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, ஆனைக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பாறங்கல் வாய்ப்பில்லையே..
மீட்புப் பணிகளைப் மேற்பார்வையிட்ட தென்மேற்கு ரயில்வே பெங்களூரு மண்டல மேலாளர் அனில்குமார் அகர்வால் கூறுகையில், விபத்தில் உயிரிழந்த ஒரு சிறுமி, 3 பெண்கள், 5 ஆண்கள் ஆகிய 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ரயில் ஓட்டுநரை விசாரித்தபோது, பாறாங்கல் உருண்டு மோதியதாகக் கூறினார். ஆனால், அந்தப் பகுதியில் பாறாங்கல் எதுவும் தென்படவில்லை என்றார்.

அமைச்சர்கள் ஆய்வு
சம்பவ இடத்துக்கு விரைந்த மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கவுடா, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உத்தரவின் பேரில், மாநில உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினார். ஆனைக்கல் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் சந்தித்து ஆறுதல் கூறினார். அனைவரின் சிகிச்சை செலவையும் கர்நாடக அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கேரளா அமைச்சர்
ரயிலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அம் மாநில முதல்வர் உம்மன் சாண்டியின் உத்தரவின்பேரில், கேரள மின் துறை அமைச்சர் ஆர்யாதான் முகமது, மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கே.பிஜு, எர்ணாகுளம் ஐஜிபி அஜித்குமார் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

ரயில்வே அமைச்சர்
இதைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் பெங்களூரு வந்த மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

விபத்துக்கு காரணம் ஓட்டுநரா?
ரயில் விபத்துக்கான காரணம் குறித்து தெளிவான விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை என்றாலும், ரயில் ஓட்டுநரின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
வளைவான பகுதியில் ரயிலை அவர் வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபோ தமது ட்விட்டர் பக்கத்தில், ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் தண்டவாளத்தின் இரு பகுதியிலும் மண்மேடுதான் இருக்கிறது. அப்படி ஒரு பாறாங்கல் விழுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

உடைந்த சக்கரம்
D9-ம் எண் பெட்டியில் ரயிலின் சக்கரம் முழுவதும் கழன்று தண்டாவளத்தை உடைத்துக் கொண்டு ரயில்பாதை முழுவதும் சேதப்படுத்தியும் அந்தப் பெட்டியில் இருந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. D.9 ரயில் பெட்டி மீது மோதிய D.8-ல் பயணம் செய்தவர்கள்தான் உயிரிழந்துனர், இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த மத்திய ரயில்வே துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உதவி
ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ரயில்வே துறை அதிகாரிகளுடன் இணைந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உதவினர். காயமடைந்த பயணிகளை இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மூலம் தங்களது கிராமத்துக்கு அழைத்துச் சென்று பொதுமக்கள் முதலுதவி அளித்தனர்.

ரயில்கள் மாற்றம்
விபத்து காரணமாக இந்த வழியாகச் செல்லும் ரயில்கள் பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை வழியாகத் திருப்பிவிடப்பட்டன. இதேபோல, சேலத்திலிருந்து பெங்களூருவுக்கு வந்து கொண்டிருந்த ரயில்கள் அனைத்தும் ஜோலார்பேட்டை வழியாகத் திருப்பிவிடப்பட்டன.

உயிரிழந்த 9 பேர்
ரயில் விபத்தில் உயிரிழந்தோர் விவரம்:
1. புனிதவதி (61)
2. வி.வி.விபின் (23)
3. அமன் (9)
4. ஜார்ஜ் (70)
5. ஆயிஷா கான் (30)
6. இட்டிரா ஆண்டனி (57)
7. நசீம் கான் (60)
8. சி.ஆர்.வேணுகோபால் (53)
9. இர்ஷா முனாஃப் (24)
இவர்களில் 5 பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

நிவாரண உதவி
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications