தந்தை தாயை கொலை செய்ததை பார்த்தும் பயத்தில் தூங்குவது போன்று நடித்த சிறுமி
மும்பை: மும்பையில் 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையை தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கியதை பார்த்தும் பயத்தில் தூங்குவது போன்று நடித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கந்திவ்லி பகுதியைச் சேர்ந்தவர் நிதின் பன்ட்கர்(37). குடிப்பழக்கம் உள்ள அவருக்கு தனது மனைவி சுரேகாவுக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளது என்ற சந்தேகம். 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு சமிக்ஷா(9) என்ற மகளும், யுவ்ராஜ்(7) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு நிதின் கத்தியை எடுத்து தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். தூங்கிக் கொண்டிருந்த சமிக்ஷா கண்விழித்து தனது தாய் கொல்லப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சப்தம் போட்டால் தந்தை தன்னையும் கொலை செய்துவிடுவார் என்று அஞ்சி தூங்குவது போன்று நடித்தார்.
இந்நிலையில் நிதின் தனது மனைவியின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவத்தை எல்லாம் பார்த்த சமிக்ஷா அதிர்ச்சியில் உறைந்தார். நிதின் தாகூர் கிராமத்தில் உள்ள சாய் மோட்டார் பயிற்சி பள்ளியில் கார், பைக் ஓட்ட கற்றுக் கொடுப்பவராக பணியாற்றி வந்தவர்.
சம்பவம் நடந்த இரவு 11 மணி வரை நிதினின் சகோதரி உமா அவர்கள் வீட்டில் இருந்துள்ளார். மறுநாள் காலை சிறுமி தனது அத்தை உமா வீட்டிற்கு ஓடிச் சென்று தான் பார்த்த கொடுமையை விவரித்தார். உடனே நிதினின் வீட்டிற்கு ஓடி வந்த உமா அங்கு தனது சகோதரரும், அவரது மனைவியும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சிறுமி போலீசாரிடம் கூறுகையில்,
தூங்கிக் கொண்டிருக்கையில் திடீர் என்று கண் விழித்தேன். என் அப்பா அம்மாவின் மார்பு மீது அமர்ந்து அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கினார். பின்னர் என் அம்மாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். அம்மா இறந்தபிறகு அப்பா சேலையால் தூக்கு போட்டார். ஆனால் சேலை கிழியவே அவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இதை எல்லாம் பார்த்தும் எனக்கு பயத்தில் யாரையும் உதவிக்கு அழைக்க தோன்றவில்லை. தூங்குவது போன்று நடித்ததில் எப்பொழுது தூங்கினேன் என தெரியவில்லை. கண் விழித்ததும் அத்தையிடம் இதை கூறினேன் என்றார்.












Click it and Unblock the Notifications