வெங்காயம் இருப்பு 90 சதவீதம் காலி: ஆனாலும் விலை குறையுமாம்... மத்திய அரசு
டெல்லி: வெங்காயம் இருப்பு 90 சதவீதம் காலியாகி விட்டதாக மத்திய உணவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் வெங்காயத்தின் விலை குறையும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.
வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது சில்லரை விற்பனை கடைகளில் சென்னையில் கிலோ ஒன்றுக்கு ரூ. 60 முதல் 70 வரையிலும், டெல்லியில் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய்க்கும் அதிகமாகவும் விற்கப்படுகிறது.
இந்நிலையில் வெங்காயத்தின் தற்போதைய இருப்பு குறித்த உணவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு விளைச்சலில் இருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தில் 90 சதவீதம் காலியாகிவிட்டதாகவும், இன்னும் 3 முதல் 4 லட்சம் டன் வெங்காயம் மட்டுமே நுகர்வோருக்கு இருப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்திட, இறக்குமதி மூலம் சந்தைக்கு வெங்காய சப்ளையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் சில சான்றிதழ் பிரச்னைகள் காரணமாக, டெண்டரில் பங்கேற்று தேர்வான நிறுவனத்திற்கு இன்னும் ஆர்டர் கொடுக்கப்படவில்லை. இதன்காரணமாகத்தான் சந்தைகளில் வெங்காய வரத்து குறைந்துபோனது.
எனினும் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் அறுவடையாகி வந்துவிடும் என்பதால், வெங்காயம் விலை இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் குறையும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.