பொங்கல் பண்டிகையை ஒட்டி இலங்கை சிறையில் உள்ள 96 மீனவர்களை விடுதலை செய்ய ஆலோசனை
டெல்லி: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 96 பேரை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க வந்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா - இலங்கை இடையிலான வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் கொழும்புவில் நடைபெறுகிறது.
அதற்கு முன்னதாக, இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலர்களின் கூட்டம் அடுத்த வாரம் கொழும்புவில் நடைபெறுகிறது. இதையொட்டி, வரும் 10- ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் கொழும்பு செல்ல உள்ளார். அப்போது, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்து அந்த சந்திப்பின்போது வலியுறத்த உள்ளார். அவர் கொழும்பு பயணத்தை முடித்து இந்தியா திரும்பியவுடன் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பில் அடுத்த மாதம், இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கை குழுவைக் கூட்டி இருதரப்பு மீனவர் விவகாரங்களை விவாதிக்க இரு நாட்டு அரசுகளும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக இரு நாட்டு அரசுகளும் பரஸ்பரம் மீனவர்களை பொங்கல் பண்டிகையையொட்டி விடுதலை செய்யும் என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.