கான்வென்ட் கிணற்றில் கன்னியாஸ்திரி சடலம்.. பரபரப்பு.. கொலையா என விசாரணை!
கேரளாவில் கிறிஸ்தவ பள்ளி கான்வெட்டில் உள்ள கிணற்றில் கன்னியாஸ்திரி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கிறிஸ்தவ பள்ளி கான்வெட்டில் உள்ள கிணற்றில் கன்னியாஸ்திரி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பாதிரியார்கள் அடிக்கடி பலாத்கார புகார்களில் சிக்கி வருகின்றனர். இதனால் கேரள பாதிரியார்கள் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது.
அண்மையில் பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண்ணை 5 பாதிரியார்கள் மிரட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பான வழக்கு அம்மாநில நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
13 முறை பலாத்காரம்
பாதிரியார்களின் காமவேட்டைக்கு சில கன்னியாஸ்திரிகளும் பலிகடா ஆகி விடுகின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியார் பிரான்கோ முலக்கல் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக கோட்டயம் போலீஸில் கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தார்.
நேற்று போராட்டம்
இதுதொடர்பாக அந்த பாதிரியாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த பாதிரியாரை கைது செய்யக்கோரி கொச்சியில் 5 கன்னியாஸ்திரிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
கிணற்றில் சடலம்
இந்நிலையில் கொல்லம் பத்தனபுரம் செயின்ட் ஸ்டீபன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் 54 வயது கன்னியாஸ்திரி மேத்யூ சூசன் இன்று காலை அங்குள்ள கிணற்றில் சடலமாக கண்டெக்கப்பட்டுள்ளார்.
ஜெபத்தில் பங்கேற்கவில்லை
இன்று காலை அங்குள்ள மூத்த பெண் ஒருவரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் ஜெபத்தில் பங்கேற்கபோவதில்லை என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்று வந்துள்ளார் சூசன்.
கிணற்றில் சடலம்
காலை 9 மணியளவில் அங்குள்ள கிணற்றின் அருகே ரத்தக்கறை படிந்திருந்ததை பார்த்த அங்குள்ள பணியாளர்கள், கிணற்றை எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது அதில் சூசன் சடலமாக மிதந்துள்ளார்.
கொலையா?
தகவலறிந்து வந்த போலீசார் சூசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கன்னியாஸ்திரி சூசன் தற்கொலை செய்துகொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணத்தால் சர்ச்சை
கன்னியாஸ்திரி சூசன் அந்த கான்வென்ட் பள்ளில் 12 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் கொடிக்கட்டி பறக்கும் நிலையில் கன்னியாஸ்திரியின் மர்ம மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.