'டெய்லி 4 மணிநேரம் ஆன்லைன் கிளாஸ்.. என்னால முடியல'.. மோடியிடம் மழலைமொழியில் முறையிட்ட 6 வயசு பிஞ்சு
காஷ்மீர்: ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை தொடர்கிறது. மிகவும் அழுத்தமாக இருக்கிறது என்று 6 வயது குழந்தை பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளன.
சாந்தினியா? யாருன்னு எனக்கு தெரியாது.. மறுத்த மாஜி அமைச்சர்.. 5 பிரிவில் பாய்ந்தது வழக்கு
கொரோனா வைரஸ் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் ஜூன் 15 வரை மூடப்பட்டுள்ளன.
ஆன்லைன் வகுப்புகள்
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால் அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மற்ற மாநிலங்களை போன்று ஜம்மு-காஷ்மீரிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, ஆன்லைன் வகுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் புகார் கூறியது அனைவரையும் கவர்ந்துள்ளது.
புகார் கூறிய குழந்தை
இது தொடர்பாக அந்த சிறுமி வீடியோ ஒன்றில், ' தனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை தொடர்கிறது. பிரதமர் மோடி அவர்களே, சிறு குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் ஏன் இவ்வளவு வேலைகளை ஒதுக்குகிறார்கள்? 6 மற்றும் 7 ஆம் வகுப்பில் இருக்கும் வயதான குழந்தைகளுக்கு அதிக வேலை கொடுக்கப்பட வேண்டும்' என்று அந்த பிஞ்சு குழந்தை மழலை மொழியில் கூறியதை கேட்டு ரசிக்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.
நெட்டிசன்கள் ஆதரவு
இதனை தொடர்ந்து அந்த சிறுமிக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலர் ஆதரவு குரல் எழுப்ப தொடங்கினார்கள். பலர் குழந்தை பேசிய வீடியோவை இணைத்து என்ன ஒரு அழகு. பல இளம் மனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த குழந்தைகளின் துயரங்களை நீங்கள் கேட்கிறீர்களா? ஆன்லைன் வகுப்புகள் என்று அழைக்கப்படும் இந்த சித்ரவதைகளிடம் இருந்து குழந்தைகளை காப்பற்றுங்கள் என்று அனைவரும் குரல் கொடுத்தனர்.
துணை நிலை ஆளுநர் அலுவலகம் பதில்
இந்த நிலையில் மழலை குழந்தையின் குரலுக்கு ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் அலுவலகம் செவிசாய்த்துள்ளது. இது தொடர்பாக துணை நிலை ஆளுநர் அலுவலகம் சிறுமியின் வீடியோவை இணைத்து வெளியிட்ட பதிவில், ' மிகவும் அபிமான ஒரு புகார். பள்ளி குழந்தைகள் மீதான வீட்டுப்பாடங்களின் சுமையை குறைக்க 48 மணி நேரத்திற்குள் ஒரு கொள்கையை கொண்டு வருமாறு பள்ளி கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தை பருவம் அப்பாவித்தனம். இது கடவுளின் பரிசு. குழந்தை பருவ நாட்கள் கலகலப்பாகவும், மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் அலுவலகம் கூறியுள்ளது.