இனி சமூக நல நிதி திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்: அருண் ஜெட்லி
டெல்லி: சமூக நல நிதி திட்டங்களுகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில், சட்டம் இயற்றப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும், மத்திய அரசின் நிதி உதவி சென்று சேர வேண்டும். இடையில் வேறு யாரோ அந்த பணத்தை எடுத்துவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இதனால்தான், சமையல் காஸ் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த ஆரம்பித்துள்ளோம். இதேபோல, இனிமேல் விவசாயிகளின் உர மானியமும், நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நிதி சேவைகளை ஆதார் அடையாள அட்டை வழியாக நிறைவேற்ற அரசு விரும்புகிறது.
ஆதார் எண் அடிப்படையில் நிதி உதவி வழங்கப்படும்போது மோசடி தடுக்கப்படும். இதை உறுதி செய்யும்விதமாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும். ஆதார் கட்டாயம் ஆக்கப்படாது என்றபோதிலும், நிதி திட்டங்களுக்கு அது அவசியப்படுகிறது. இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications