சிங்கங்களின் தாக்குதலிலிருந்து எஜமானைக் காப்பாற்றிய நாய்
குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் ஆடுமேய்ப்பவரை சிங்கங்களின் தாக்குதலிலிருந்து அவர் வளர்த்த நாய் காப்பாற்றியுள்ளது.
ராஜ்கோட்: குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரை சிங்கங்களின் தாக்குதலில் இருந்து அவர் வளர்த்த நாய் ஒன்று காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டம், சர்வகுண்ட்லா அருகே உள்ள அம்பார்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பவேஷ் ஹமிர் பர்வாட் (25). இவர் நேற்று சனிக்கிழமை கிராமத்துக்கு அருகே உள்ள புல்வெளிக்கு வழக்கம் போல ஆடுகளை மேய்க்கச் சென்றுள்ளார். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபொது திடீரென மூன்று சிங்கங்கள் வந்து மேய்ந்துகொண்டிருந்த மூன்று ஆடுகளை தாக்கி கொன்றுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பவேஷ் ஹமிர் பர்வாட் கூச்சலிட்டு சிங்கங்களை விரட்டியுள்ளார்.
ஆடுகளைக் கொன்று இழுத்துச் சென்ற சிங்கம் ஒன்று பவேஷ் ஹமிர் பர்வாட் விரட்டியதால் அவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து அலறியுள்ளார். அப்போது, அங்கே இருந்த பவேஷ் ஹமிர் பர்வாட் வளர்த்த நாய், சிங்கங்களை எதிர்த்து சத்தமாக குறைத்துள்ளது. நாயின் குறைத்தல் சத்தத்தில் மிரண்டுபோன சிங்கங்கள் தாக்குதலில் இருந்து பின்வாங்கியுள்ளன. நாய் மிக வேகமாக சத்தம் போட்டு குறைத்ததால் அருகே இருந்த கிராமத்தினர் சிலர் ஏதோ அசம்பாவிதம் நடப்பதாகக் கருதி சம்பவ இடத்துக்கு திரண்டு வந்துள்ளனர்.
மக்கள் கூட்டமாக வருவதைப் பார்த்த சிங்கங்கள் ஆடு மேய்க்கும் பவேஷ் ஹமிர் பர்வாட் மீதான தாக்குதலை விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்துள்ளன. அங்கே வந்த மக்கள் சிங்கத்தின் தாக்குதலில் கை மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்திருந்த பவேஷ் ஹமிர் பர்வாட்டை மீட்டு சர்வகுண்ட்லா மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர், பொதுமக்கள், காடுகளிலிருந்து சிங்கங்கள் கிராமப்புற பகுதிக்கு வந்திருப்பதை வனத்துறைக்கு தெரிவித்தனர்.
சர்வகுண்ட்லா அம்பார்டி கிராமத்தில் சிங்கங்களின் தாக்குதலில் இருந்து தனது எஜமானைக் காப்பாற்றிய நாயை மக்கள் அனைவரும் பாராட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.