இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது.. ஒரே ஒரு நபரால் பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல்!
பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் தற்போது பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
போபால்: பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் தற்போது பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பலர் பாஜக கட்சிக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். இந்த மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த சாத்வி பிரக்யா தாக்குர்.
பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். சாத்வி பிரக்யா தாக்குர் பாஜக சார்பாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போட்டியிடுகிறார்.

தொடர் கருத்து
சாத்வி தொடர்ச்சியாக நிறைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். முதலில் தீவிரவாத எதிர்ப்பு படையை சேர்ந்த மறைந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரே நான் கொடுத்த சாபத்தால்தான் பலியானார் என்று கூறினார். அதன்பின் நான்தான் பாபர் மசூதியை இடித்தேன் என்றும் தொடர்ச்சியாக சர்ச்சையாக பேசி வந்தார்.

என்ன பிரச்சனை
சாத்வி பேச்சு தொடர்ந்து சர்ச்சை ஆனதால், இவர் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக சாத்வி சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இவரால் தற்போது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.

எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்
அதன்படி ஒரு குண்டுவெடிப்பு தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு பாஜக ஏன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. இதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மும்பை தீவிரவாத தாக்குதலில் மக்களுக்காக உயிர் விட்ட ஹேமந்த் கார்கரே குறித்தே தவறாக பேசுகிறார். பாஜக தலைவர்களும் அதை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதை எல்லாம் ஏற்க முடியாது என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்கள் சிலர் தெரிவித்து இருக்கிறார்கள்.

என்ன சொன்னார்
பாஜக கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ராமதாஸ் அத்வாலே இதுகுறித்து கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அதில், ஹேமந்த் கார்கரே நாட்டுக்காக உயிர் விட்டார். ஆனால் சாத்வி குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியவர். அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருக்கிறது. அவரை எல்லாம் பாஜக தேர்தலில் நிற்க வைப்பது பெரிய தவறு என்று ராமதாஸ் அத்வாலே குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் பிரச்சனை
ஏற்கனவே பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் உமாபாரதி சாத்விக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். சாத்வி இப்படி எல்லாம் பேசுவது பெரிய தவறு என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது கூட்டணி கட்சிகளும் பாஜகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக பேச தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications