நெருங்கும் க்ளைமாக்ஸ்.... 2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோரின் இறுதிவாதம் நிறைவு- தீர்ப்பு ஒத்திவைப்பு?
2ஜி ஊழல் முறைகேடு வழக்கில் இன்று ஆ. ராசா உள்ளிட்டோர் இறுதிவாதங்கள் முடிவடைந்தன. இதையடுத்து வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட உள்ளது.
டெல்லி: நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி ஊழல் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் தமது இறுதிவாதங்களை இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிறைவு செய்தனர். அனைத்து தரப்பு இறுதி வாதங்களும் முடிவடைந்த பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட உள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ1.70 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றம்சாட்டியிருந்தார். நாட்டையே உலுக்கிய இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

அதேபோல் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 2011-ல் சிபிஐ, 2014-ல் அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள். கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்ச்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வருகிறார்.
இவ்வழக்கில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு மற்றும் குற்றம்சாட்டப்பட்டோர் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று முதல் இருதரப்பும் இறுதிவாதங்களை முன்வைக்க நீதிபதி ஷைனி உத்தரவிட்டிருந்தார்.
இன்று ஆ.ராசா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் பெகுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா உள்ளிட்டோர் தமது இறுதி வாதங்களை நிறைவு செய்தனர். இறுதிவாதங்கள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும்.












Click it and Unblock the Notifications