ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ.ராசா உள்பட 10 பேர் ஜாமீன் மனு மீதான வாதம் முடிந்தது! விரைவில் தீர்ப்பு!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீதான வாதங்கள் முடிவடைந்துள்ளன. இதன் மீதான தீர்ப்பு விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்காக டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியது தொடர்பான 2-வது வழக்கில் மத்திய அமலாக்கப்பிரிவு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதில் ஆ.ராசா, கனிமொழி சரத்ரெட்டி உள்ளிட்டோருடன் தயாளு அம்மாள் பெயரும் இடம் பெற்றுள்ளது. தயாளு அம்மாள் தவிர குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
உடல் நலக்குறைவு காரணமாக தயாளு அம்மாளுக்கு ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் அவர் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 9 பேர் ஜாமீன் கேட்டு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினார்கள்.
கடைசியாக இன்று 9-வதாக ஆ.ராசா தரப்பு வாதம் முடிந்தது. அப்போது, ஆ. ராசாவுக்கு இந்த குற்றச்சாட்டில் எந்த தொடர்பும் இல்லை என்று வாதிடப்பட்டது.
தயாளு அம்மாள் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யாததால் அவரது வழக்கறிஞரையும் ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஓ.பி.சைனி கூறினார்.
இதைத் தொடர்ந்து தயாளு அம்மாள் தரப்பில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்கறிஞர் வாதமும் உடனே தொடங்கி முடிந்தது. இந்த வழக்கில் 10 பேரின் ஜாமீன் மனு வாதம் முடிந்துவிட்டதால் விரைவில் தீர்ப்பு கூறப்பட உள்ளது.