திருமண புகைப்படங்களை ஆபாச வீடியோக்களாக மாற்றிய ஸ்டுடியோ.. கேரளாவில் நடந்த மோசடி!
கேரளாவில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்று திருமண நிகழ்வுகளில் எடுக்கும் புகைப்படங்களை ஆபாச வீடியோக்களாக மாற்றி இருக்கிறார்கள்.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்று திருமண நிகழ்வுகளில் எடுக்கும் புகைப்படங்களை ஆபாச வீடியோக்களாக மாற்றி இருக்கிறார்கள்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் வடகரா பகுதியில் உள்ள ''சதயம் ஷுட் அண்ட் எடிட்'' என்ற ஸ்டுடியோவில்தான் இந்த மோசடி நடைபெற்று இருக்கிறது. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இந்த ஸ்டுடியோ செயல்பட்டு வருகிறது.
இதுவரை இவர்கள் 1000க்கும் அதிகமான திருமணங்களில் புகைப்படம், வீடியோ எடுத்து இருக்கிறார்கள். இந்த திருமண புகைப்படங்கள் எல்லாவற்றையும் இவர்கள் தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டிரெண்ட்
சமீப காலங்களில் திருமணங்களில் அதிக செலவு செய்து, புதிய மாடல் கேமராக்களை வைத்து புகைப்படம் எடுத்து ஆல்பம் போடுவது டிரெண்ட் ஆகி உள்ளது. திருமணத்திற்கு முன், பின், குழந்தை கருவில் இருக்கும் போது, குழந்தை பிறந்தவுடன் ''பேபி ஷூட்'' என்று நிறைய போட்டோ ஆல்பங்கள் போடப்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கும் கேரளாவில் இருக்கும் முன்னணி ஸ்டுடியோதான் ''சதயம் ஷுட் அண்ட் எடிட்''.
ஆபாச இணையதளம்
இவர்கள் தங்கள் எடுக்கும் புகைப்படங்களை மோசமான ஆபாச வீடியோக்களில் இணைத்து, அதை தனியாக அவர்கள் நடத்தும் ஆபாச இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். 5 வருடமாக அவர்கள் இந்த மோசமான செயலை செய்து வந்துள்ளார்கள். குழந்தைகள் புகைப்படங்களை கூட இவர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
கைது
இந்த மோசடி தற்போது கேரளா தம்பதிகள் கொடுத்த புகாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் முக்கிய பங்காற்றிய தினேஷன், சதீஷன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஸ்டுடியோவை திறந்தது இவர்கள்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் முக்கிய குற்றவாளியான பீபீஷ் இன்னும் கைது செய்யபடவில்லை. இன்னும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறது.
முதல்வர் தலையீடு
இந்த நிலையில் இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது மட்டும் இல்லாமல் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது கேரளா முதல்வர் பினராயி விஜயன் இதில் நேரடியாக தலையிட்டு விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இதில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் உடனடியாக கைது செய்ய ஆணையிட்டு உள்ளார்.