சண்டையில் பலியான என்ஜினியர்.. தெரியாமலேயே சில மணிநேரத்தில் ஆண்குழந்தை பெற்ற மனைவி
பெங்களூருவில் திருப்புளியால் குத்தப்பட்ட என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் திருப்புளியால் குத்தப்பட்ட என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் இறந்த சில மணி நேரத்தில் அவரது கர்ப்பிணி மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி 3-வது ஸ்டேஜில் வசித்து வந்தவர் குருபிரசாத். 31 வயதான இவர், பெல்லந்தூரில் உள்ள பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
கடந்த 6-ந் தேதி குருபிரசாத் கம்ப்யூட்டர் மையத்துக்கு 'பிரிண்ட்-அவுட்' எடுக்க சென்றார். அப்போது கடையில் இருந்த கார்த்திக் என்பவருக்கும் குருபிரசாந்த் இடையே தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம்
பிரிண்ட் அவுட்டுக்கான விலையை கார்த்திக் மாற்றி மாற்றி கூறியதால் தகராறு ஏற்பட்டது. இதனால் குருவுக்கும் கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்புளியால் குத்திய கார்த்திக்
வாய்த் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கார்த்திக், திருப்புளியை எடுத்து குருபிரசாத்தின் தலையில் குத்தியுள்ளார். இதனால் அவருடைய தலையில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.
தீவிர சிகிச்சை
இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
உயிரிழந்த குருபிரசாத்
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு குருபிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த கிரிநகர் போலீசார் கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.
ஒரே மருத்துவமனையில்
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான குருப்பிரசாத்தின் மனைவி மமதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை கணவர் குருபிரசாத் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலேயே அனுமதித்தனர்.
ஆண் குழந்தை பிறந்தது
ஆனால் அவரிடம், குருபிரசாத் இறந்தது பற்றி குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை. கணவர் இறந்த அடுத்த சில மணிநேரத்தில் மமதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
கதறி அழுத குடும்பம்
கணவர் இறந்த சம்பவம் தெரியாமலேயே அவரது மனைவி ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதனையறிந்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர்.