எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு திருத்தச் சட்டம் 2018ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு
எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு திருத்தச் சட்டம் 2018ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லி: எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு திருத்தச் சட்டம் 2018ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எஸ்சி, எஸ்டி மக்கள் மீது சாதி ரீதியாக வன்கொடுமை நிகழ்த்துபவர்கள் இந்த சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு வந்த பாஜக அரசு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியது. பின்னர், மீண்டும் நாடாளுமன்றத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தின் எ.கே.கோயல் மற்றும் யு.யு. லலித் நீதிபதிகள் அடங்கிய அமர்வு, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான ஒரு வழக்கில், அரசு ஊழியர்கள் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குதொடரப்பட்டால் சம்பந்தப்பட்டவரை மேலதிகாரியின் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது என தலித் அமைப்புகள், அரசியல் கட்சிகள் நாடு முழுவது போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வட இந்தியாவே ஸ்தம்பிக்கும் நிலை உருவானது.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு பாதுகாக்கும் என்று உறுதி கூறினார். இதையடுத்து, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்த்திருத்தம் 2018 நிறைவேற்றப்பட்டது. இதனால், தலித் அமைப்புகள் அறிவித்திருந்த நாடு தழுவிய பந்த் கைவிடப்பட்டது.
இந்நிலையில், பிரிதிவிராஜ் சவுகான் மற்று பிரியா சர்மா இருவரும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018 ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018 ஆர்ட்டிகிள் 14, 19, 21 ஆகியவை இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், "இந்த திருத்தச் சட்டத்தை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசால் நிறைவேற்றப்படும்வரை இப்படியான அச்சுறுத்தல்கள் தொடரவே செய்யும்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications