உதவி கேட்டு வந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உதவி கேட்டு வந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆளும் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்ததாகவும், அப்போது கவுன்சிலர் உட்பட கட்சியினர் சிலர் தன்னை மிரட்டியதாகவும் அதனால்தான் தற்போது புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள பெண் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் ஆளும் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் மீது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

உதவி
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூரில் உள்ள காரக்பூர் நகராட்சியின் திரினாமுல் காங்கிரஸ் கவுன்சிலராக இருப்பவர் முகேஷ் ஹம்னே. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கணவனை இழந்த இளம்பெண் ஒருவர் இவரின் உதவியை நாடியுள்ளார். அதாவது, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவனை இழந்த இந்த இளம்பெண் பின்னர் அரவிந்த் ராவ் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்திருக்கிறது. ஆனால் போகப் போகதான் அரவிந்தின் உண்மை குணம் தெரிய வந்துள்ளது.

காதலன்
அதாவது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் உறவு கொண்டு விட்டு பின்னர் ஏதோ ஒரு காரணம் சொல்லி தன்னை தட்டிக்கழிப்பதை இளம்பெண் உணர்ந்துள்ளார். இதே போக்கு நீடித்து வருகையில் நீதி கேட்டு அப்பகுதி கவுன்சிலரான முகேஷ் ஹம்னேவிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் அப்பெண் திரினாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலையில் இந்த பிரச்னை தொடர்பாக சமரசம் பேச அரவிந்தையும், இளம்பெண்ணையும் கட்சி அலுவலகத்திற்கு அழைத்துள்ளார் கவுன்சிலர் ஹம்னே.

கூட்டு பாலியல் பலாத்காரம்
அப்போது எதிர்பாராத விதமாக அரவிந்த் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து கவுன்சிலர் ஹம்னே மற்றும் அலுவலக ஊழியர் ஒருவரும் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து அதே நாளில் அரவிந்த் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இளம்பெண். ஆனால் கவுன்சிலர் மீது புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை. இதன் பின்னர் கடந்த மாதம் 21ம் தேதி காவல்துறை எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு இளம்பெண் கடிதம் எழுதியுள்ளார்.

புகார்
அதில் தான் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், இதை வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாக கவுன்சிலர் மிரட்டியதால் தன்னால் அப்போது உண்மையை சொல்ல முடியவில்லை எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது வெளிவந்துள்ளது. கடிதத்தில் கவுன்சிலரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அப்பெண் வலியுறுத்தியுள்ளார். உதவி கேட்டு வந்த பெண்ணை ஆளும் கட்சியின் கவுன்சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் கவுன்சிலர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். கட்சிக்குள் தனக்கு எதிராக நடக்கும் சதிதான் இந்த குற்றச்சாட்டு என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications